முஸ்லிம் இளைஞரை கைது செய்ய முடியாது.. "காதல்" தனி மனித சுதந்திரம்.. அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி தடை!
முஸ்லிம் இளைஞரை கைது செய்ய முடியாது என்று அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
அலகாபாத்: லவ் ஜிஹாத் சட்டத்தின் கீழ் முஸ்லீம் இளைஞரைக் கைது செய்வதற்கு அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி தடை விதித்துள்ளது. காதலிப்பது தனி மனித சுதந்திரம், அதைத் தடுக்க முடியாது என்றும் கோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது.
கல்யாணம் செய்து கொள்வதற்காக நடைபெறும் மதமாற்றத்தை லவ் ஜிகாத் என்று சிலர் கூறி வருகின்றனர்.. இந்த விவகாரம் சில மாதங்களாகவே நாடு முழுவதும் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
கல்யாணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று ஒரு வழக்கில் அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.. இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவற்றில் லவ் ஜிகாதுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
இஸ்லாமிய இளைஞர்
மதங்களை கடந்து கல்யாணம் செய்து கொள்ளும்போது, இஸ்லாமிய இளைஞர்கள் பலர் இந்த சட்டத்தின் மூலம் கைதாகியும் வருகிறார்கள்.. அந்தவகையில்தான் மொரதாபாத்தில் 2 சம்பவங்கள் சமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இந்து பெண் பிங்கி என்பவர் இஸ்லாமிய இளைஞர் ரஷீத் அலியை காலித்து, கல்யாணமும் செய்தார்.. பிங்கி கர்ப்பமாக இருந்த நிலையிலும், போலீஸாரால் அலைக்கழிக்கப்பட்டு அந்த கரு கலைந்தேவிட்டது..
கல்யாணம்
ரஷீத்துக்கு 21 வயதாகிறது..டிசம்பர் 6-ம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்ய சென்றுள்ளனர்... அப்போது பஜ்ரங் தள் அமைப்பினர், சம்பந்தப்பட்ட பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.. அவர்களது கல்யாணம் லவ் ஜிகாத் என்றும் புகார் சொன்னார்கள்.
சட்டம்
அந்த புகாரின்பேரில் கந்த் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், பிங்கியை பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரது கணவர், மற்றும் அவரது மைத்துனரை மதம் மாற கட்டாயப்படுத்தியதாக சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி ஜெயிலில் அடைத்தனர். இவர்கள் 2 பேரும் சிறைக்கு செல்லவும் அந்த குடும்பமே வறுமையால் பரிதவித்து விட்டது.
கருச்சிதைவு
அடுத்த சில நாட்களிலேயே ஏழு வாரங்கள் கர்ப்பமாக இருந்த தனக்கு கஸ்டடியில் கருச்சிதைவு ஏற்பட்டது என்று பிங்கி சொன்னார்.. மேலும், அவர் மாஜிஸ்ட்ரேட்டிடம், தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தன் கணவரை திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, தான் ஒரு மேஜர் என்று சொன்னதையடுத்து, மாமியார் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனாலும், அவரின் கணவரும் கணவரின் சகோதரரும் தொடர்ந்து ஜெயிலிலேயே வைக்கப்பட்டனர்.
மனு
இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு எதிராக, சவுரப் குமார் என்ற வழக்கறிஞர், பொது நல மனு ஒன்றை, அலகாபாத் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "இந்த சட்டவிரோத மதமாற்ற தடுப்பு அவசர சட்டம் அடிப்படை உரிமைகளை, பறிக்கும் வகையில் உள்ளது. இந்த சட்டம், அரசியலைப்புக்கு முரணானது... அதனால், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, இந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
நோட்டீஸ்
இந்த மனு, தலைமை நீதிபதி கோவிந்த் மாத்துர் மற்றும் நீதிபதி பியுஷ் அக்ரவால் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனு குறித்து பதிலளிக்கக்கோரி, உபி அரசுக்கு, நோட்டீஸ் அனுப்பி, வரும் ஜனவரி, 4ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
திருமணம்
இதுபோலவே, நதீம் என்பவர் இந்து பெண்ணை காதலித்து மணம் முடித்தார்.. ஆனால், அவர் மீதும் இந்த சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. அந்த எப்ஐஆரில், பெண்ணின் மதத்தை மாற்றும் நோக்கத்திற்காகவே அவருடன் காதலை நதீம் வளர்த்து கொண்டதாக உறவை வளர்த்துக் கொண்டதாகவும், இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
நிலுவை பாக்கி
ஆனால் இந்த குற்றச்சாட்டை நதீம் மறுத்திருந்தார்.. தன் மீது வழக்கு ஒன்றில் நிலுவை தொகை பாக்கி இருப்பதால், இப்படி ஒரு புகார் வேண்டுமென்றே தன்மீது தெரிவித்ததாக கூறியிருந்தார்.. இது சம்பந்தமான வழக்கும் அலகாபாத் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இளைஞர்
அப்போது, நீதிபதிகள் லவ் ஜிஹாத் சட்டத்தின் கீழ் முஸ்லீம் இளைஞர் நதீமை கைது செய்வதற்கு தடை விதித்தனர்.. "காதலிப்பது தனி மனித சுதந்திரம்.. அதை தடுக்க முடியாது.. அதேபோல, மதம் மாற்றுவதற்காகவே அந்த பெண்ணுடன் உறவை நீடித்தார் என்று சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.. மேலும் மத்திய அரசு ஒரு சட்டத்தை உருவாக்கியவுடன், மாநில அரசுக்கு அதை வேறு ஒரு சட்டமியற்றி நிறைவேற்ற முடியாது.. அதனால் நதீமை கைது செய்ய முடியாது" நீதிபதிகள் தெரிவித்தனர்.