'முத்தலாக்' நடைமுறை அரசியல் சாசனத்திற்கே எதிரானது: அலகாபாத் ஹைகோர்ட் தடாலடி
அலகாபாத்: முஸ்லிம் சமூகத்தில் நடைமுறையிலுள்ள மூன்று தலாக் விவாகரத்து நடைமுறை சட்டத்திற்கு விரோதமானது என அலாகாபாத் ஹைகோர்ட் கூறியுள்ளது.
மும்முறை தலாக் சட்ட விரோதமானது என்று அலகாபாத் ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தை காட்டிலும் தனி நபர் சட்ட வாரியம் உயர்ந்தது இல்லை என்றும் அந்த ஹைகோர்ட் கூறியுள்ளது.
மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறையை இஸ்லாம் தனி நபர் சட்ட வாரியம் ஏற்கிறது. ஆனால் இதற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் சிலரும், தன்னார்வ அமைப்புகளும் அணி சேர்ந்துள்ளன.
இதுகுறித்த வழக்கு ஒன்றை இன்று விசாரித்த உ.பி.மாநிலத்தின் அலகாபாத் ஹைகோர்ட், இது முஸ்லிம் பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என கண்டித்துள்ளது. மேலும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் இது என்றும், இந்திய அரசியல் சாசனத்தைவிடவும், தனி நபர் சட்ட வாரியம் உயர்ந்தது இல்லை எனவும் அது கூறியுள்ளது.