ஹத்ராஸ் பலாத்காரம்: படுகொலையான பெண் உடலை அவசரமாக எரித்தது மனித உரிமை மீறல்: ஹைகோர்ட் கண்டனம்
அலகாபாத்: உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் உடலை போலீசார் அவசரமாக எரியூட்டியது மனித உரிமை மீறல் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹத்ராஸ் தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தேசம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மேலும் உத்தரப்பிரதேச போலீசார், அரசு அதிகாரிகளுக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இவ்வழக்கில் இன்றைய விசாரணையில் உத்தரப்பிரதேச மாநில அரசை அலகாபாத் உயர்நீதிமன்ரம் கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்த விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் உரிய மரியாதைகள் இன்றி அவசரம் அவசரமாக எரியூட்டியது மனித உரிமை மீறலாகும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு அவர் சார்ந்த மதரீதியான சடங்குகளை பெற்றோர் செய்ய அனுமதித்திருக்க வேண்டும்.
இதெல்லாம் எதுக்காம்? யானை மேல் உட்கார்ந்து யோகா செய்யப் போய் பரிதாபமாக பொத்தென விழுந்த பாபா ராம்தேவ்
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டுத் தொகையை உத்தரப்பிரதேச அரசு தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். இந்த நிதி உதவியை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் பெற மறுத்தால் அதை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறினர். இதனிடையே இந்த வழக்கில் சிபிஐ தரப்பும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.