குஜராத் கூட்டத்தில் சிறுவனை பதம்பார்த்த கற்கள்.. பாஜக மீதுதான் தப்பு! சீறும் ஆம் ஆத்மி
காந்திநகர்: குஜராத்தில் தங்களது பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் கல்லெறிந்ததால் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை ஆம் ஆத்மியின் குஜராத் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபால் இத்தாலியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கெனவே இரு கட்சியினருக்கும் இடையில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில் இரு புது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
கல்வான் விவகாரம்.. நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்ந்து சீனில் வந்த நடிகை நக்மா.. பாஜக மீது கடும் தாக்கு
கல்லெறி சம்பவம்
குஜராத்தில் கதர்காம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு ஆம் ஆத்மி பிரசார பொதுக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்திருந்த நிலையில், திடீரென கல்வீச்சு சம்பவம் நடந்திருக்கிறது. இதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். இது குறித்து ஆம் ஆத்மி, பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. பாஜகதான் இதற்கு முழு காரணம் என்றும் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மியின் குஜராத் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபால் இத்தாலியா கூறுகையில்,
ஆம் ஆத்மி கண்டனம்
"கதர்காம் சட்டமன்றத் தொகுதியில் தோற்றுவிடுவோமா? என்கிற பயத்தில் பாஜக குண்டர்கள் இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்திருக்கும்போது சில பணிகளை செய்திருந்தால் இன்று ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் கல்லெறிய வேண்டிய அவசியம் வந்திருக்காது. கல்லெறியும் பாஜகவினருக்கு பொதுமக்கள் தக்க விதத்தில் பதிலளிப்பார்கள்" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லி சுகாதார துறை அமைச்சர் விவகாரத்தில் பாஜக தொடர்ந்து ஆம் ஆத்மியை விமர்சித்து வரும் நிலையில் தற்போது ஆம் ஆத்மி இந்த விஷயத்தை கையில் எடுத்து பாஜகவை கடுமையாக தாக்கி வருகிறது.
கைது
டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ ஆம் ஆத்மியின் சத்யேந்தர் ஜெயின் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையும், இவர் மீதும் இவரது மனைவி உட்பட 10 பேர் மீது 'நிதி மோசடி' வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் விசாரணைக்கு சத்யேந்தர் ஜெயின் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அமலாக்கத்துறை கடந்த மே மாதம் இவரையும் இவரது நண்பர்கள் இரண்டு பேரையும் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது.
பாஜக கண்டனம்
தற்போது சத்யேந்தர் ஜெயினின் வீடியோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதில் சிறைக்குள் ஜெயின் மசாஜ் செய்துகொள்வதைப்போல சில வீடியோக்கள் இருந்தன. ஆனால், அவருக்கு உடல்நலக் கோளாறு இருப்பதாகவும் எனவே 'பிசியோதெரபி' எடுத்துக்கொண்டிருப்பதாகவும் ஆம் ஆத்மி விளக்கமளித்தது. ஆனால், சிறை நிர்வாகம் இதனை மறுத்துள்ளது. அதாவது, சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் 'பிசியோதெரப்பிஸ்ட்' கிடையாது என்றும், அவர் ஒரு போக்சோ குற்றவாளி என்றும் சிறை நிர்வாகம் தெளிவிப்படுத்தி இருந்தது. இதனையடுத்து மேலும் சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோக்களை சுட்டிக்காட்டி சத்யேந்தர் ஜெயினை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஆம் ஆத்மி இதற்கு பிடிகொடுக்கவில்லை. இந்த சூழலில்தான் குஜராத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாஜக கல்லெறிந்ததாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.