ராஜஸ்தான் கொடூரம்: பசு தீவிரவாதிகள் நடத்திய கொடூர கொலை.. டீ குடித்துவிட்டு ஆற அமர வந்த போலீஸ்
ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ரஃபர் மரணத்திற்கு போலீசும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
Recommended Video
ஜெய்ப்பூர்: பாஜக ஆளும் ராஜஸ்தானின் ஆல்வாரில் பசு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ரஃபர் மரணத்திற்கு போலீசும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
வேண்டுமென்றே அவரை போலீஸ் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து இன்னும் எந்த விதமான விசாரணையும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அக்பரும் எனப்படும் ரஃபரும் அவரது நண்பர் அஸ்லாம் கானும் ஒன்றாக சேர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை பசுமாடு வாங்கி கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். விவசாய தேவைக்காக அவர்கள் மாடு வாங்கி வந்துள்ளனர்.
என்ன நடந்தது
ராஜஸ்தானின் அல்வார் என்ற பகுதியில் உள்ள, லலவண்டி என்ற பகுதியில் வரும் போது அவர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டும், பெரிய இரும்பு கம்பியால் அடித்தும் தாக்கி இருக்கிறார்கள். இதில் இருந்து தப்பி அஸ்லாம் ஓடி இருக்கிறார். ஆனால் தனியாக மாட்டிய ரஃபரை மோசமாக தாக்கி இருக்கிறார்கள்.
போலீஸ் வந்தனர்
இந்த சம்பவம் நடந்தது இரவு 12.45க்கு. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸ், 1.30 மணிக்கு அந்த இடத்திற்கு வந்துள்ளது. ஆனால் அதற்குள் அந்த கொடூரமான பசு தீவிரவாதிகள் அந்த இடத்தை காலி செய்துவிட்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் அங்கு வந்த போலீஸ் ரஃபரை தூக்கி தண்ணீர் கொடுத்து உடலை தண்ணீர் ஊற்றி கழுவி இருக்கிறார்கள்.
மாட்டுக்கு உதவி
அதன்பின் லாரி ஒன்றை வர வைத்து இருக்கிறார்கள். அந்த லாரி வந்த பின் அதில் எல்லா மாடுகளையும் ஏற்றி, பக்கத்து ஊரில் இருந்த குடிசை ஒன்றுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அந்த மாட்டிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிந்த பின் மீண்டும் ரஃபரை பார்க்க வந்துள்ளனர். அதன்பின் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
டீ குடித்தனர்
ஆனால் போகும் வழியில் ஒரு கடையில் 3.30 மணிக்கு டீ குடித்து இருக்கிறார்கள். பின் 4.30 மணிக்குத்தான் அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்று இருக்கிறார்கள். 2.5 கிலோ மீட்டர் தூரத்தை காரில் கடக்க அவர்கள் 3 மணி நேரம் எடுத்து இருக்கிறார்கள். அதற்குள் ரஃபர் சுயநினைவை இழந்து இருக்கிறார்.
இறந்தே போய்விட்டார்
இந்த நிலையில் இத்தனை களேபரங்களுக்கு பிறகு ரஃபர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். ஆனால் அவரை சோதனை செய்த மருத்துவர், அவர் இறந்தே போய்விட்டார் என்று கூறியுள்ளார். கொஞ்சம் விரைவாக வந்திருந்தால், கண்டிப்பாக அவரை காப்பற்றி இருக்க முடியும் என்று கூறியுள்ளனர்.