"நான் முஸ்லீம் பாதி, இந்து பாதி"... ஜோத்பூர் கோர்ட்டில் சல்மான்கான் வாக்குமூலம்!
ஜோத்பூர்: ஜோத்பூர் நீதிமன்றத்தில் "நான் ஒரு இந்து மற்றும் முஸ்லிம்" என்று நீதிபதியிடம் தெரிவித்துள்ளார் நடிகர் சல்மான்கான்.
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998 ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்றபோது லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் கஷில்லா என்ற இடத்தில் மானை வேட்டையாடியதாக அவர் மீது ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் சல்மான்கான் நேற்று ஜோத்பூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். பூட்டிய அறையில் நடிகரின் வக்கீல் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீதிபதி அனுபமா பிஜிலானி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
அப்போது நீதிபதி அவரிடம் உங்கள் பெயர், தந்தை பெயர் மற்றும் உங்கள் தொழில், சாதி போன்ற விவரங்களை அளிக்க கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த நடிகர் சல்மான்கான் முதலில் நான் ‘இந்தியன்' என பதில் அளித்தார். பின்னர் நீதிபதி என்ன சாதி என்று மீண்டும் அவரிடம் திருப்பி கேட்டார். அதற்கு பதில் அளித்த நடிகர் சல்மான்கான் நான், "இந்து மற்றும் முஸ்லிம்‘' என பதில் அளித்தார்.
அதுகுறித்து விளக்குமாறு தொடர்ந்து நீதிபதி கேட்கவே, எனது தந்தையான பிரபல எழுத்தாளர் சலீம்கான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். எனது தாயார் சுசீலா கார்க் இந்து மதத்தை சேர்ந்தவர் என சல்மான் அதற்கு விளக்கம் அளித்தார்.