கின்னஸ் சாதனை படைத்த சந்திரபாபு நாயுடுவின் 'அமராவதி' பிரச்சாரம்
ஹைதராபாத்: என் செங்கல், என் அமராவதி பிரச்சாரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 'என் செங்கல் என் அமராவதி' என்ற பிரச்சாரத்தை துவங்கி வைத்தார். இந்த பிரச்சாரம் மூலம் கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்யப்பட்டது. அதாவது 24 மணிநேரத்தில் நல்ல காரியத்திற்காக ஆன்லைனில் பலரை தானம் செய்ய வைப்பது.
அதன்படி 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 470 பேர் ஆன்லைனில் இ-செங்கல் வாங்கியுள்ளனர். இதன் மூலம் 'என் செங்கல் என் அமராவதி' பிரச்சாரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விஜயவாடா எம்.பி. கேசினேனி நானி கூறுகையில்,
அமராவதி பிரச்சாரம் மூலம் உலக சாதனை படைக்க வேண்டும் என்று கூறியதை சந்திரபாபு நாயுடு ஏற்றுக் கொண்டார் என்றார்.
ஆந்திரா முழுவதும் 1 லட்சத்து 43 ஆயிரத்து 740 பேர் ஆன்லைனில் இ-செங்கல் வாங்கி எங்கள் முயற்சியை வெற்றியடைய வைத்துள்ளனர் என்று பிரச்சாரத்தை கண்காணித்த தெலுங்கு தேச கட்சி குழு உறுப்பினர் கே. பட்டாபிராம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
முன்னதாக சீன என்.ஜி.ஓ. நடத்திய பிரச்சாரத்தின்போது 1 லட்சத்து 5 ஆயிரத்து 800 பேர் நல்ல காரியத்திற்காக ஆன்லைனில் பொருள் வாங்கியது தான் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமராவதி நகருக்கு நன்கொடை அளிக்க ஆன்லைனில் இ-செங்கல் வாங்குமாறு தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலத்தில் 10 நாட்கள் பிரச்சாரம் செய்தனர். மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் நன்கொடை அளித்து இந்த பிரச்சாரத்தை வெற்றியடைய வைத்துள்ளனர் என்றார்.