ஆந்திராவுக்கு ரூ 50,000 கோடி சிறப்பு நிதி உதவி.... இன்று பிரதமர் மோடி அறிவிப்பு?
விசாகப்பட்டினம்: ரூ2 லட்சம் கோடி நிதி உதவியுடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, தனி ரயில்வே மண்டலம் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு. இருப்பினும் முதல் கட்டமாக ரூ50 ஆயிரம் கோடி நிதி உதவிக்கான அறிவிப்பை இன்றைய புதிய தலைநகர் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதி நகரத்துக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட புதிய வரலாறு உதயமாகிறது. இந்த விழாவில் ஆந்திராவின் மிக முக்கியமான கோரிக்கைகளான மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு 4 முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ரூ2 லட்சம் கோடி நிதி உதவி, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் தனி ரயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என்பதுதான் ஆந்திராவின் எதிர்பார்ப்பு.
இதில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை குறித்து பிரதமர் மோடி எந்த ஒரு அறிவிப்பையும் இன்று வெளியிட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் ரூ50 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை பிரதமர் வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மூன்றடுக்கு ரயில் பாதை, உள்கட்டமைப்புக்கான உதவி, மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக்குதல் ஆகியவை குறித்தும் பிரதமர் மோடி இன்று அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரா அரசு புதிய தலைநகரை உருவாக்க ரூ1,20,000 கோடி தேவை என மதிப்பிட்டுள்ளது. மேலும் புதிய உயர்நீதிமன்றம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் என பல்வேறு கட்டமைப்புகளை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யவும் ஆந்திரா திட்டமிட்டுள்ளது.
நாட்டிலேயே வாஸ்து அடிப்படையில் அமைக்கப்படும் முதலாவது தலைநகராக அமராவதி உருவாக உள்ளது. முதல் கட்டமாக 7 லட்சம் பேருக்கு வாய்ப்பளிக்க வகை செய்யும் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த ஆந்திரா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தலைநகரம் குறித்து கருத்து தெரிவித்த ஆந்திரா முதல்வர் சந்திரபாபு, சுகாதாரத்தை பேணக் கூடிய நகரமாக இது இருக்கும். நாட்டின் மிகவும் தூய்மையான நகராக இது அமையும் என்று கூறியிருந்தார்.
இதற்கேற்ப சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்துகள் அமைக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் இந்த நகரம் அமைய உள்ளது.