குண்டுமழைக்கு நடுவே குனிந்தபடியே 2 கி.மீ பஸ் ஓட்டி அமர்நாத் யாத்ரீகர்களை காப்பாற்றிய பஸ் டிரைவர்!
அமர்நாத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது குனிந்தபடியே சாதுர்யமாக பேருந்தை ஓட்டி 50 பேரின் உயிரைக் காப்பாற்றிய சலீமின் பெயர் வீரதீர செயல் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சூரத் : அமர்நாத் பக்தர்கள் மீதான தாக்குதலின் போது 2 கிமீட்டர் தூரம் பேருந்தை சீட்டின் கீழ் அமர்ந்தே ஓட்டிச் சென்று சுமார் 50 பேரின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் சலீமின் பெயர் துணிச்சல் மிகுந்த வீர தீர செயலுக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பஸ்சில் சென்ற பன்தர்கள் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்ததோடு, 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்களே காரணம் என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
|
தைரியமாக எடுத்த முடிவு
இந்நிலையில் அமர்நாத் குகைக் கோவிலை தரிசித்து விட்டு திரும்பிய குஜராத் மாநிலத்தை சேர்ந்த பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர் சலீம் ஷேக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பேருந்து மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய போதும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தைரியமாக பேருந்தை ஓட்டிச் சென்று அருகில் இருந்த ராணுவ முகாமில் கொண்டு போய் சேர்த்துள்ளார்.
குனிந்தபடியே ஓட்டிச் சென்றார்
இதனால் 50 யாத்ரீகர்கள் உயிர் காக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து கூறிய சலீம் ஷேக், "முதலில் வந்த துப்பாக்கிக் குண்டு என்னுடைய தலைக்கு மேல் சென்று ஒரு பயணியை தாக்கியது. அனைவரும் கூக்குரலிடத் தொடங்கினர், ஆனால் நான் ஒரு கனம் கூட யோசிக்காமல் பஸ்ஸை வேகமாக ஓட்டிச் சென்றேன். இது எல்லாம் நடந்தது அந்த அமர்நாத் கடவுளின் ஆசியால் தான், அவர் தான் எனக்கு தைரியத்தை கொடுத்தார்" என்று நெகிழ்கிறார் சலீம்.
பாராட்டு, பரிசு
முதல் துப்பாக்கிக் குண்டு பஸ் கண்ணாடியை தாக்கியபோதே இது தீவிரவாத தாக்குதல் என்பதை உணர்ந்தேன், சீட்டின் கீழ் அமர்ந்தபடியே ராணுவ முகாம் வரை பேருந்தை ஓட்டிச் சென்றேன், என்று தன்னுடைய திக் திக் அனுபவத்தை கூறுகிறார் சலீம். ஷேக், தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளத்திற்கு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார், அமர்நாத் யாத்ரீகர்களை காப்பாற்றியதால் அவருக்கு ஜம்மு காஷ்மீர் அரசு ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசும், அமர்நாத் கோவில் வாரியம் சார்பாக ரூ.2 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கு பரிந்துரை
ஆபத்தான சூழலில் துணிச்சலாக செயல்பட்ட சலீம் ஷேக்கின் செயலை பாராட்டி வீர தீச செயலுக்கான விருதை பெறுவதற்கு அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஷேக்கிற்கு 4 சகோதரர்களும், 2 சகோதரிகளும் உள்ளனர், அவருடைய தந்தையும் முன்னாள் பேருந்து ஓட்டுநர். சலீம் ஷேக் கடந்த 15 ஆண்டுகளாக அமர்நாத் யாத்ரீகர்களுக்கான பேருந்தை ஓட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.