காஷ்மீரில் குஜராத் பதிவு எண் கொண்ட பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 7 அமர்நாத் யாத்ரீகர்கள் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டத்தில் குஜராத் பதிவு எண் கொண்ட பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பலியாயினர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பேருந்து ஒன்றில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து மீது இரவு 8.30 மணி அளவில் தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பக்தர்களில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதிக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பேருந்து குஜராத் (GJ09 Z9976) பதிவு எண் கொண்டது என தெரியவந்துள்ளது. அந்த பேருந்தில் சென்றவர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வதற்காக பதிவு செய்யப்படாமல் பாதுகாப்பில்லாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. அமர்நாத் புனித யாத்திரை செல்லும் வாகனங்கள் சிஆர்பிஎஃப் போலீசாரின் பாதுகாப்போடு வழிநடத்திச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.