அமர்நாத் யாத்திரை துவங்கியது: பனிப்பொழிவு காரணமாக மலையேறுவதில் சிரமம்
ஸ்ரீநகர்: அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க இரண்டாவது குழு இன்று ஜம்முவில் இருந்து புறப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் பனிலிங்கத்தை காண வருடந்தோறும் யாத்ரீகர்கள் ஜம்மு வழியாக பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரிகை தொடங்கி உள்ளது.
முதல் குழுவாக 1160 யாத்திரிகர்கள் சில தினங்களுக்கு முன்னர் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். இருப்பினும் பனிக்கட்டி குவியல்கள் காரணாமாக பயணம் செய்வதில் சிரமம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது குழு பயணம்
இந்நிலையில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு ஜம்முவில் இருந்து 742 பேர் கொண்ட மற்றொரு குழு பயணத்தை தொடங்கியுள்ளது. இதில் 626 ஆண்களும், 102 பெண்களும் மற்றும் 14 குழந்தைகள் அடங்குவர். இவர்கள் 34 வாகனங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிளில் ஜம்முவில் உள்ள பகவதி நகர் கேம்பில் இருந்து புறப்பட்டனர்.
1902 யாத்ரீகர்கள்
இவர்களுக்கு வழிகாட்டும் பாதுகாப்பு படையினர் ஏற்கனவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பால்டால் கேம்பை நோக்கி ஜம்மு-ஸ்ரீநகர் தேசியநெடுஞ்சாலை வழியாக சென்றுள்ளனர். இன்றைய யாத்திரீகர்களுடன் சேர்ந்து இதுவரை 1902 பேர் ஜம்முவில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
20 அடி பனிலிங்கம்
அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு 20 அடி பனி லிங்கம் காணமுடியும் என்றும் இருப்பினும் கடுமையான பனி காரணமாக பஹல்காம் பாதையில் யாத்திரிகர்கள் சிரமங்களை மேற்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்நிலையில் கத்துவாவில் இருந்து ஜம்மு நெடுஞ்சாலையில் பல்வேறு பாதுகாப்புகள் யாத்திரிகர்களுக்காக செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.