பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை தொடக்கம்- முதல் நபராக பனிலிங்கத்தை தரிசிக்கும் ராஜ்நாத் சிங்
ஸ்ரீநகர்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அமர்நாத் யாத்திரையின் முதல்நாளன்று சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசிக்க புறப்பட்டு சென்றனர்.
அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் ராஜ்நாத் சிங், பனி லிங்கத்தை முதல் நபராக தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோராவும் அவருடன் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமர்நாத் யாத்திரை 48 நாட்கள் நடைபெறும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. எனவே, பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு பகவதி நகரில் உள்ள அமர்நாத் முகாமில், ஆளில்லா விமானங்கள் கண் காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஆளில்லா விமானங் கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. அமர்நாத் பனி லிங்க தரிசனத்துக்குச் செல்லும் இரு பாதைகளிலும் 20 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தெற்கு காஷ்மீரில் பனிபடர்ந்த இமயமலையின் உச்சியில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் ஜூலை மாதங்களில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் புனிதப்பயணம் செய்வார்கள்.
தற்போது, இங்கு பனியால் ஆன லிங்கம் உருவாகியுள்ளது. இதை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து இந்து பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.
குகைக்கோயிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்ல முடியாது. நடைப்பயணமாக தான் செல்ல முடியும். மேலும், பதிவு செய்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். எனவே, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
48 நாட்கள் நடைபெறும் இப்புனிதயாத்திரை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. முதல் குழுவில் 900 ஆண்கள், 225 பெண்கள், 13 சிறார்கள், 144 சாதுக்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழு, 33 வாகனங்களில் சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்புடன் பயணத்தைத் தொடங்கியது. அப்போது பக்தர்கள் ஹர ஹர மஹாதேவா என்ற முழக்கமிட்டனர்.
பகல்ஹாம், பல்தல் முகாம்கள் வழியாக சென்று, கடல்மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலுள்ள பனி லிங்கத்தை இன்று தரிசிப்பார்கள்.
தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதால், அமர்நாத் யாத்திரையை சுமூகமாக நடைபெறச் செய்வது பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக இருக்கும். 12,500 மத்திய துணை ராணுவப் படையினரும், 8,000 மாநில போலீஸாரும் யாத்திரை பாதைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பல லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் குவிய உள்ளதால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த மலையடிவாரத்தில் உள்ள ஆறு முகாம்களில் செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பத்ற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இங்குள்ள ஐந்து முகாம்களின் அருகாமையில் தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து முகாம்களிலும் தொலைபேசி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கழிப்பறைகள், குளியல் அறைகள், பொது சமையல் கூடங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. யாத்ரீகர்களின் சுமைகளை ஏற்றிச் செல்ல சுமார் 15 ஆயிரம் கழுதைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் புறப்பட்டு சென்றார். இன்று அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் ராஜ்நாத் சிங், பனி லிங்கத்தை முதல் நபராக தரிசனம் செய்கிறார். காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோராவும் அவருடன் செல்கிறார்.