தீவிரவாத தாக்குதலால் அச்சமில்லை.. இன்றும் தொடர்கிறது அமர்நாத் யாத்திரை
டெல்லி: தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகும், இன்று அமர்நாத் யாத்திரை வழக்கம்போல நடைபெறும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
குஜராத்திலிருந்து அமர்நாத் யாத்திரைக்காக காஷ்மீர் வந்திருந்த 6 பெண்கள் உட்பட 7 யாத்ரீகர்கள் நேற்று இரவு நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியாகினர். 32 பேர் காயமடைந்தனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, இதுபோன்ற தாக்குதல்களுக்கு இந்தியா அடி பணியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று வழக்கம்போல அமர்நாத் யாத்திரை தொடரும் என காவல்துறை அறிவித்துள்ளது. வழக்கமாக வழங்கப்படும் பாதுகாப்பை விட கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
சுமார் 3000 யாத்ரீகர்கள் இன்று பயணத்தை தொடர்ந்து, பனி லிங்கத்தை தரிசனம் செய்ய உள்ளனர். காயமடைந்து ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள், உயர் சிகிச்சைக்காக இன்று விமானம் மூலம், டெல்லி அழைத்து வரப்பட உள்ளனர்.
இதனிடையே, தாக்குதலுக்கு உள்ளான குஜராத் பஸ், காவல்துறையிடம் பதிவு செய்து பாதுகாப்புடன் பயணிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.