காஷ்மீர் கலவரம்.. இரண்டு நாள் தடைக்கு பிறகு மீண்டும் துவங்கியது அமர்நாத் யாத்திரை
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டரான பர்ஹான் வானியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதையடுத்து வன்முறை வெடித்தது. இதையடுத்து நடந்த வன்முறை சம்பவங்களில் 38 உயிரிழந்தனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 9-ஆம் தேதி முதல்முறையாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. பின்னர் வன்முறை கட்டுக்குள் வந்ததும் யாத்திரை தொடங்கியது. 14-ம் தேதி மீண்டும் வன்முறை அதிகரித்ததால் அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சனிக்கிழமை முதல் மீண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. பகவதி நகர் முகாமில் இருந்து சுமார் 100 வாகனங்களில் பால்டால் மற்றும் பாகல்காம் முகாமிற்கு யாத்ரீகர்கள் புறப்பட்டுச்சென்றதாக ஜம்மு துணை கமிஷனர் தெரிவித்தார்.
அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை இன்று வரை 127000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.