பண்டிகை கால ஆஃபர் நேரத்திலா இப்படி ஒரு சோதனை.. அமேசான் டெல்லி ஆபீசுக்கு சீல்
டெல்லி: விழாக்கால விற்பனையில் அமேசான் மும்முரமாக ஈடுபடும் நிலையில் அதன் டெல்லி அலுவலகம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தசரா, தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளதால் இது இந்தியாவில் பண்டிகை கொண்டாட்ட காலமாகும். இதையொட்டி மக்கள் அதிகப்படியாக ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவார்கள்.
முன்பெல்லாம் நேரில் சென்று ஷாப்பிங் செய்த மக்கள் இப்போது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
[பெட்ரோல், டீசல் விலையில் குறைப்பு.. அருண் ஜேட்லி அறிவிப்பு.. புதிய விலை என்ன?]
ஆஃபர் விலை
இதை கருத்தில் கொண்டு அக்டோபர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை 'கிரேட் இந்தியன் பெஸ்டிவல்' என்ற பெயரில் தள்ளுபடி விலையில் பல பொருட்களை விற்பனை செய்வதற்காக அமேசான் தயாராகி வருகிறது. இந்த காலகட்டத்தில் பல பொருட்களும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும்.
சீல் வைப்பு
இதையொட்டி 25,000 சதுர அடி பரப்பில், குர்கான் பகுதியில் டெலிவரி செய்வதற்காக ஒரு பெரிய அலுவலகத்தை கூட சமீபத்தில் அமேசான் திறந்திருந்தது. இந்த நிலையில் தெற்கு டெல்லி மாநகராட்சி பகுதியில் வசந்த்குஞ்ச் பகுதியிலுள்ள இதன் விற்பனை அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
சட்ட விரோதம்
சட்டவிரோத கட்டுமானம் காரணமாக சீல் வைக்கப்பட்டதாக தெற்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விற்பனை நிலையம் மற்ற ஒருவருக்கு சொந்தமானது.
டெலிவரி தாமதம்?
அதன் உரிமையாளர், மாநகராட்சியிடம், பெற்ற அனுமதியையும் தாண்டி கூடுதலாக கட்டிடங்களைக் கட்டி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை கொண்டு சேர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.