ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி பொருட்களை டோர் டெலிவரி செய்ய அமேசான் திட்டம்! அடுத்த மாதம் அறிமுகம்!!
டெல்லி: அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயங்கும் குட்டி விமானங்கள் மூலமாக பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை இந்தியாவில் அடுத்த மாதம் துவங்க உள்ளது.
ஃபிளிப்கார்ட், அமேசான் போன்றவை ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளன. ஆர்டர் செய்யும் பொருட்களை சொல்லும் இடத்துக்கு அந்த நிறுவன ஊழியர்கள் வாகனங்களின் மூலமாக வந்து டெலிவரி செய்து வருகிறார்கள். இதற்கு எரிபொருள் செலவு, ஊழியர் சம்பளம், டிராபிக் நெரிசல் போன்ற பிரச்சினைகள் இடையூறாக உள்ளன.
இந்தியாவில் ட்ரோன்
எனவே ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயங்கும் ட்ரோன் எனப்படும் சிறிய ரக விமானங்கள் மூலமாக பொருட்களை டெலிவரி செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதற்கான சோதனை முயற்சி அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
அரை மணி நேரத்தில் டெலிவரி
ட்ரோன் மூலமாக பொருட்களை சப்ளை செய்ய அதிகபட்சம் அரை மணி நேரம்தான் ஆகும் என்பதால் வாடிக்கையாளர்களை கவர இந்த திட்டத்தை செயல்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா அனுமதி மறுப்பு
அமெரிக்காவில்தான் அமேசான் முதன்முதலில் இதுபோன்ற சோதனை முயற்சியை தொடங்க திட்டமிட்டிருந்தது. ஆனால் ஆளில்லாத விமானங்களை இயக்க அமெரிக்க விமான துறை அனுமதிக்கவில்லை. ஆளில்லாத விமானத்தை வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்பதால், அந்த நாட்டு சட்டப்படி ட்ரோனை தனியார்கள் பயன்படுத்துவது குற்றமாகும். அடுத்த ஆண்டுவாக்கில் இந்த சட்டத்தில் அமெரிக்கா தளர்வு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதத்தில் அறிமுகம்
எனவே அமேசான் நிறுவனம் இந்தியாவில் ட்ரோன் மூலம் சோதனை செய்து பார்க்க உள்ளது. இந்தியாவில் ட்ரோன் குறித்த எந்த சட்டமும் இதுவரை இயற்றப்படவில்லை என்பதால் இந்தியாவை தனது சோதனை முயற்சிக்கு அமேசான் தேர்ந்தெடுத்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இதுபோன்ற சோதனை முயற்சிகள் இந்தியாவில் தொடங்கப்படும்.
விளம்பர யுத்தி
இந்தியாவில் தற்போது ஃபிளிப்கார்ட்தான் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னிலையில் உள்ளது. ட்ரோன் சேவையை தொடங்கும்போது கிடைக்கும் விளம்பரத்தால் அமேசான் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்புள்ளதாக வர்த்தக துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.