
தேர்தல் தோல்வி.. ஆம்பூர் பாஜக பிரமுகர் செய்த “காரியம்” - மனைவி அளித்த புகாரின்பேரில் கைது
திருப்பத்தூர்: ஆம்பூரில் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் மீது அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் வரதட்சணை கொடுமை உட்பட 8 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (32). இவர் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு தருமபுரியை சேர்ந்த திரட்சிகா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக மின்னூர் கிராம தலைவர் பதவியிற்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனை தொடந்து கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையே சீனிவாசன் தனது மனைவியை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாதி பெயரை சொல்லி கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த திரட்சிகா தனது சொந்த ஊரான தருமபுரிக்கு சென்று அங்கே தாயிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவரை பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நடந்த சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த திரட்சகாவிடம் வாக்குமூலம் மற்றும் புகார் மனு பெற்றனர்.
விம்பிள்டன் அட்மின் விஜய் ரசிகரா? ரோஜர் பெடரருக்கு “வாத்தி கம்மிங்” என மாஸ் வெல்கம்!
அதன் அடிப்படியில் வரதட்சனை கொடுமை, வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் மனைவியை கட்டையால் தாக்கிய வழக்கு உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சீனிவாசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் வரதட்சணை கேட்டு கட்டையால் தாக்கி கொடுமைபடுத்திய சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.