ரக்ஷா பந்தன் அன்று சகோதரர்கள் சகோதரிக்கு கொடுக்கும் "தூய்மையான" பரிசு என்ன தெரியுமா?
ரக்ஷா பந்தன் அன்று சகோதரர்கள் சகோதரிக்கு கழிப்பறைகளை கட்டி அதை பரிசாக கொடுக்கவுள்ளனர்.
அமேதி: ரக்ஷா பந்தன் என்ற வடமாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகையில் இந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநில சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு கழிப்பறைகளை கட்டி அதை பரிசாக அளிக்கவுள்ளனர்.
ரக்ஷா பந்தன் என்பது, ஆடி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.
இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம்.
வட இந்தியாவில்...
வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த கொண்டாட்டம் தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னஞ்சிறு கடைகளிலும் தொங்குவதைக் காணலாம்.
வசதிக்கேற்ப பரிசுகள்
இந்த பண்டிகையை யொட்டி அவரவர் வசதிக்கேற்ப பரிசுகளை வழங்குவர். அந்த வகையில் அமேதியில் உள்ள சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு ரக்ஷாபந்தன் அன்று கழிப்பறைகளை கட்டி வழங்கவுள்ளனர்.
854 சகோதரர்கள்
ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் பெண்களுக்கு கழிப்பறை கட்டித்தரும் திட்டத்தை அதிகாரிகள் முன் வைக்கின்றனர். இதன்படி 854 "சகோதரர்கள்" தங்களது சகோதரிகளுக்கு கழிப்பறை கட்டித்தருவார்கள்.
சொந்த செலவில்...
அவர்கள் தங்கள் சொந்த செலவில் கழிப்பறைகளைக் கட்டி தருவர். மாவட்டத்தின் பல்வேறு தாலுக்காக்கள், ஒன்றியங்களிலிருந்து இவர்கள் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் கழிப்பறைகளை கட்ட வேண்டும்.
பரிசு வழங்கப்படும்
கழிப்பறைகள் கட்டிய பின்னர் குலுக்கல் முறையில் மூன்று பரிசுகள் வழங்கப்படும். ரொக்கப்பரிசாக ரூ. 50,000 மும், மொஃபைல் ஃபோன்களும் வழங்கப்படும். கட்டப்பட்ட கழிவறைகளை அதிகாரிகளின் குழு ஒன்று ஆராயும். அதன் பின்னர் மாவட்ட அளவிலான விழா ஒன்றில் பரிசுகள் உரியவர்களுக்கு ஒப்படைக்கப்படும்.