ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் "ராஜினாமா" பரபரப்பு கிளப்பிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்!!
டெல்லி: லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடம்பிடித்து வருகின்றன. இந்த நிலையில் தமது ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து 'வெளியுறவுத் துறை அமைச்சர்' பதவியை சுஷ்மா ஸ்வராஜ் திடீரென நீக்கிவிட பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்வார் எனக் கூறப்பட்ட நிலையில் ட்விட்டர் அக்கவுண்ட்டில் மீண்டும் 'வெளியுறவுத் துறை அமைச்சர்' என சேர்த்துவிட்டார் சுஷ்மா.
நிதி மோசடி வழக்கில் தப்பி லண்டனில் தலைமறைவாக இருக்கும் ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் நாள்தோறும் பிரளயத்தைக் கிளப்பி வருகிறது. தற்போது நாடாளுமன்றமும் இதனால் அமளிக் காடாகி வருகிறது.
இந்த விவகாரம் வெடித்த போது அமைச்சர் பதவியில் இருந்து சுஷ்மா ராஜினாமா செய்ய விரும்பியதாகவும் ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்களே தடுத்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன.
தற்போது இந்த விவகாரத்தில் தாம் பதிலளிக்க தயார் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறி வருகிறார். இந்நிலையில் திடீரென அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டில் 'வெளியுறவுத் துறை அமைச்சர், இந்திய அரசு' என்பது நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் எந்த நேரத்திலும் சுஷ்மா ஸ்வராஜ் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்ற பரபரப்பும் கிளம்பியது. இருப்பினும் தனிப்பட்ட சில கருத்துகளை ட்விட்டரில் பதிவு செய்ய நினைத்து கூட அதனை சுஷ்மா நீக்கியிருக்கலாம் என்றன அவரது ஆதரவாளர்கள்.
இந்நிலையில் எதுக்கு வம்பென கருதி, தற்போது தமது ட்விட்டர் அக்கவுண்ட்டில் 'இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்' என மீண்டும் இடம்பெறச் செய்துவிட்டார் சுஷ்மா...
ஆத்தாடி...எப்படியெல்லாம் கிளப்புறாய்ங்க...