கடும் பனி.. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2 பேர் வாகனத்திற்குள்ளேயே மரணம்
ஸ்ரீநகர்: ஜம்மு-ஸ்ரீநகர் மாநிலத்தின் நுழைவுவாயிலான பனிகாலில் கடும் பனி காரணமாக மினி லாரிக்குள் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனிடையே பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்ட காஷ்மீர் சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் ஸ்ரீநகரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பனிகால் நகரம். இந்த ஊரை கடந்து தான் ஸ்ரீநகர், லடாக் என காஷ்மீரின் பகுதிக்கு செல்ல முடியும். இதேபோல் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு, பதன்கோட், சண்டிகர், டெல்லி வரவும் 270 கி.மீ நெடுஞ்சாலைதான் உள்ளது.
இந்த சாலைகளில் கடும் பனிபொழிவு ஏற்படும் நாட்களில் பனிக்கட்டிகள் சாலையை மூடிவிடும். அந்த சமயத்தில் வாகனங்களை செல்ல போலீசார் அனுமதிக்கமாட்டார்கள்.
பனிக்கட்டி
பனிக்கட்டிகளை அகற்றிய பின்னரே அனுமதிப்பார்கள். அதுவும் மொத்தமாக அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாகவே அனுமதிப்பார்கள். இந்நிலையில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நஷ்ரி மற்றும் பனிஹால் இடையேயான பல இடங்களில் காணப்படும் பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவாயிலான ஜவஹர் சுரங்கத்தின் இருபுறமும் குவிந்து கிடந்த பனிக்கட்டிகள் அகற்றி போக்குவரத்து சீர் செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நேற்று நிறுத்தப்பட்டது.
2 பேர் பலி
இந்நிலையில் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரல்போரா கிராமத்தில் வசிக்கும் ஷபீர் அஹ்மத் மிர், 22, மற்றும் மஜீத் குல்சார் மிர் (30) ஆகியோர் ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் ஜவஹர் சுரங்கப்பாதையைச் சுற்றி பனிப்பொழிவு ஏற்பட்டதால் நெடுஞ்சாலை சனிக்கிழமை மூடப்பட்டது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் தங்கள் வாகனத்திற்குள் மயக்கமடைந்து கிடந்தனர். இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
மூச்சுத்திணறல்
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், டிரைவர்கள் இருவரும் கடுமையான குளிர் அல்லது மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை. அவர்கள் வாகனத்தின் ஹீட்டரை வைத்திருந்தனர். இரவில் தங்களை சூடாக வைத்திருக்க நெருப்புப் பானையில் கரியை எரித்திருக்கிறார்கள். அதன்பிறகு மயக்கம் அடைந்து இறந்துள்ளார்கள் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்கள்.
வன்முறை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பனிஹாலில் உள்ள ரயில்வே சுரங்கபாதை முன்பு லாரி ஓட்டுநர்கள் உட்பட ஏராளமான மக்கள் ஆர்பாட்டத்தை நடத்தினர், இருவரின் மரணத்திற்கும் அரசாங்கமே பொறுப்பு என்றார்கள். ஆர்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசாரை நோக்கி கற்களை அவர்கள் வீசினர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி அடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.