ஆட்சியை தக்க வைக்க மம்தாவின் புதிய வியூகம்...முதல் குறி இவர்களின் ஓட்டுக்கள் தான்
கொல்கத்தா : 2021 சட்டசபை தேர்தல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வாழ்வா - சாவா நிலை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு கட்சிக்குள் அவருக்கு அத்தனை எதிர்ப்புக்கள் உள்ளது.
நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தை, 2011 ல் தன் வசப்படுத்தியவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும், அரசு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், குறிப்பாக மம்தா குடும்பத்தை சேர்ந்த பலர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களால் கட்சிக்குள் அவர் மீது அதிருப்தி நிலவுகிறது.
இதன் வெளிப்பாடாக கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர், கட்சியில் இருந்து விலகி, பாஜக.,வில் இணைந்துள்ளனர். அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்துள்ளனர். ஊழல் புகார்கள், பல விஷயங்களில் நேரடியாக எதிர்ப்பதால் பாஜக உடனான மோதல் ஆகியவற்றால் மம்தா கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். இதனால் ஆட்சியை தக்க வைக்க பல வியூகங்களை அவர் வகுத்து வருகிறார்.
நம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி
மூத்த தலைவர்களைக் கொண்ட குழு
கட்சியின் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்காக மூத்த தலைவர்கள் அடங்கிய குழு ஒன்றை மம்தா அமைத்துள்ளார். இளைஞர் அணி தலைவரான அபிஷேக் பானர்ஜி, சுப்ரதா பக்ஷி, சந்திரிமா பட்டாச்சாரியா, அருப் பிஸ்வாஸ் உள்ளிட்ட பலரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இளம் வேட்பாளர்களை களமிறக்க திட்டம்
வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக மூத்த தலைவர்களிடம் மம்தா கருத்து கேட்டு வருகிறார். அதிக அளவிலான இளைஞர்களை வேட்பாளராக நிறுத்த மம்தா திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான தேர்வை ரகசியமாக நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்கு மிக குறுகிய நாட்களே உள்ளதால் விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேஜஸ்வி யாதவுடன் சந்திப்பு
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவை கொல்கத்தாவில் இருக்கும் வீட்டில், மூத்த தலைவர்கள் குழுவுடன் இன்று நேரில் சென்று சந்திக்க மம்தா திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் அக்கட்சி தலைவர்கள் அபிஷேக் பானர்ஜியை சந்தித்து பேசினர். இந்நிலையில் ஆர்ஜேடி.,யுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க மம்தா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்ஜேடி.,யுடன் கூட்டணி ஏன்
யாதவர்களின் ஓட்டுக்களை கைப்பற்ற ஆர்ஜேடி.,யின் ஆதரவை மம்தா கேட்க உள்ளார். மேற்கு வங்கம் மட்டுமின்றி அசாம் தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடவும் மம்தா திட்டமிட்டுள்ளார். இதனால் தானே நேரில் சென்று கூட்டணியை இறுதி செய்ய மம்தா வியூகம் வகுத்து வருகிறார்.
8 கட்ட தேர்தல் ஏன்
மேற்கு வங்கத்தில் மார்ச் 27 துவங்கி, ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஏற்கனவே திரிணாமுல் - பாஜக இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால், தேர்தல் சமயத்தில் பெரிய அளவில் வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.