டெல்லியில் உச்ச கட்ட அதிகார யுத்தம் !! அதிகாரிகளை நியமித்த ஆளுநருக்கு கெஜ்ரிவால் கண்டனம் !!!
டெல்லி : ஊழல் தடுப்பு பிரிவுக்கு புதிய தலைவர் மற்றும் அதிகாரிகளை நியமித்த துணை நிலை ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் போர்க் கொடி உயர்த்தியுள்ளார்.
ஊழல் தடுப்பு பிரிவுக்கு பீகாரிலிருந்து அதிகாரிகளை நியமிக்க கெஜ்ரிவால் முடிவு செய்திருந்தார். ஆனால் அவர்களை நியமிக்க ஆளுநர் நஜீப் ஜங் மறுத்து விட்டார்.
இந்நிலையில், டெல்லி மாநில ஊழல் தடுப்பு பிரிவுக்கு அம்மாநில காவல் துறை இணை ஆணையர் எம்.கே.மீனாவை துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் நியமித்தார். மேலும் ஒரு இணை ஆணையர் மற்றும் 7 காவல் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில முதலமைச்சருக்கே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மாநில ஊழல் தடுப்பு பிரிவு முதலமைச்சர் கீழ் உள்ளதாகவும் அதில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகமும், ஊழல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உள்ளது என்றும் முதலமைச்சருக்கு கிடையாது என்றும் ஏற்கனவே கூறியிருந்தது.
டெல்லி மாநில உள்துறை செயலாளர் நியமனத்தில் தொடங்கிய துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் இடையேயான மோதல் தொடர்ந்து முற்றி வருகிறது.