குஜராத்துல நீங்க முழக்கமிடுவது மேற்கு வங்கத்துக்கு கேட்கணும்.. மம்தாவை அலறவைத்த அமித் ஷா
அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக தொண்டர்கள் எழுப்பும் முழக்கம் மேற்கு வங்கத்துக்கு கேட்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 26 மக்களவை தொகுதிகளிலும் பாஜக அபாரமாக வெற்றி பெற்றது.
இதற்கான நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை குஜராத்தில் நடந்தது. இதில் பல்லாயிரம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் வந்தனர். அவர்கள் அஹமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினர்.அதன்பின்னர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமித்ஷா, சூரத் நகரில் தீவிபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். மேலும் குஜராத்தில் பாஜக தொண்டர்கள் முழக்கமிடுவது மேற்கு வங்கம் வரை கேட்க வேண்டும் என்றும் எனவே மேற்குவங்கத்திற்கு கேட்குமாறு தொண்டர்களே முழக்கமிடுங்கள் என்றும் கூறினார். இதை கேட்டு பாஜக தொண்டர்கள் விண்ணை பிளக்கும் வகையில் முழக்கமிட்டனர்.
மேற்கு வங்கத்தில் பாஜக 18 இடங்களில் முதல்முறையாக வென்றுள்ள நிலையில் அடுத்த தேர்தலில் அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக தீவிரமாக வேலை செய்துவருகிறது. இதனால் அம்மாநில முதல்வர் மம்தாவுக்கு கடுமையான போட்டியை அமித்ஷாவும் மோடியும் அளித்து வருகின்றனர்.
இதனால் தேர்தலில் இருந்தே மம்தா, அமித்ஷா, மோடியை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மம்தாவுக்கு கேட்க வேண்டும் என்று குறிப்பிடும் விதமாகவே இன்று அமித்ஷா மேற்கு வங்கத்துக்கு தொண்டர்களின் முழக்கம் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.