சிஏஏவில் குடியுரிமையை பறிக்கும் சட்டப் பிரிவு இருந்தால் காண்பியுங்கள்.. மம்தாவுக்கு அமித்ஷா சவால்
போபால்: குடியுரிமையை பறிக்கும் ஏதாவது ஒரு சட்டப் பிரிவு குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்தால் காண்பியுங்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்தும் போராட்டம் முடிவுக்கு வந்த பாடில்லை.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் சார்பில் அதிகாரப்பூர்வமான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இன்று மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த பேரணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில் நாம் எப்படி இந்தியாவை சேர்ந்தவர்களோ அது போல் பாகிஸ்தான், தெற்காசிய நாடுகளில் உள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள் ஆகியோருக்கும் இந்தியாவில் சம உரிமை உள்ளது.
அவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமையை நிச்சயமாக வழங்கும். மம்தா, ராகுல் காந்திக்கு நான் சவால் விடுகிறேன். ஒருவரின் குடியுரிமையை பறிக்கும்படியான சட்டப்பிரிவு ஏதேனும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இருந்தால் அதை காண்பியுங்கள் என்றார். காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.