போலி என்கவுண்ட்டர் வழக்கு- கோர்ட்டில் ஆஜராக அமித்ஷாவுக்கு விலக்கு!
மும்பை: போலி என்கவுண்ட்டர் தொடர்பான வழக்கில் மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவரான அமித்ஷா, குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த போது போலி எக்னவுண்ட்டர் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் சொராபுதீன் மற்றும் துளசி பிரஜாபதி ஆகியோர் என்கவுண்ட்டரில் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் அமித்ஷா உட்பட மொத்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்ட்டு மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு இதுவரை ஒருமுறை கூட அமீத்ஷா நேரில் ஆஜரானதில்லை.
இதனால் மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் ஜூன் மாதம் நீதிபதியாக இருந்த உத்பத் கடுமை காட்டி அமித்ஷா நேரில் ஆஜராக உத்தரவிட்டார். உடனடியாக அந்த நீதிபதி புனே நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
இதன் பின்னரும் அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து வந்தார். இன்று இந்த வழக்கின் விசாரணையின் போது அமித்ஷா டெல்லியில் இருப்பதாகவும் அவருக்கு திட்டமிட்ட பணிகள் இருக்கிறது என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார்.
இதனை ஏற்று மும்பை சிபிஐ நீதிமன்றமும் வழக்கின் விசாரணைக்கு அமித்ஷா நேரில் ஆஜராவதில் விலக்கு அளித்து உத்தரவிட்டது.