ஒரே நாளில் 1800 வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கிய அமித் ஷா.. வதந்திகளை தடுக்க அதிரடி திட்டம்!
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் கட்டளையின் படி இந்தியா முழுக்க அந்த கட்சிக்காக 1800 புதிய வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் கட்டளையின் படி இந்தியா முழுக்க அந்த கட்சிக்காக 1800 புதிய வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ் ஆப் வதந்தி பிரச்சனைதான் இந்தியா முழுக்க பெரிய பிரச்சனையாகி உள்ளது. குழந்தை கடத்தல் பிரச்சனை தொடங்கி தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்பது வரை நிறைய விஷயங்களை தவறாக பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதை எல்லாம் தடுக்க வாட்ஸ் ஆப் சில வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பாஜக கட்சியும் வதந்திகள் பரவுவதை தடுக்க ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
பாஜக மீது விமர்சனம்
பாஜக கட்சி, தேசிய அளவில் மிகப்பெரிய கட்சியாக இருந்தாலும், அந்த கட்சி மீது எல்லோரும் முக்கியமான விமர்சனம் ஒன்றை வைப்பது வழக்கம். பாஜகவினர் அதிக அளவில் வதந்திகளை பரப்புகிறார்கள், சமூக வலைதளங்களில் நிறைய பொய்யான தகவல்களை பாஜக பரப்புகிறது என்று புகார் வைக்கப்படுகிறது. முக்கியமாக வரலாறு குறித்து நிறைய பொய்யான தகவல்களை பரப்புகிறது என்று புகார் வைத்தது.
கண்டித்தார்
இந்த நிலையில்தான் கடந்த ஒரு மாதமாக, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, நாடு முழுக்க பாஜக கட்சியினரை சந்தித்து பேசினார். மண்டலம் வாரியாக, தலைவர்களை சந்தித்து அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் பாஜக கட்சியினர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டி இருக்கிறார். இதற்காக பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.
என்ன செய்தாய் அமித் ஷா
இதற்காக இந்தியா முழுக்க 1800 மண்டலம் வாரியாக, வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி தற்போது ஒரே நாளில் 1800 வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்திலும் அமித் ஷா இடம்பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில வாட்ஸ் ஆப் குழுக்களில் அவர் அட்மீனாகவும் இருக்கிறார்.
தேர்தல் திட்டம்
இதில் அவர் மட்டுமில்லாமல் மாநில தலைவர்கள், செயலாளர்களும் இருக்கிறார்கள். இதில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்து வருகிறார்கள். பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதம் செய்து வருகிறார்கள். உலகிலேயே அதிக வாட்ஸ் குழுக்களில் இடம்பெற்ற நபர் அமித் ஷாவாக கூட இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.