எங்களுக்கு பயம் கிடையாது... மம்தாவை எச்சரிக்கும் பாஜக... அமித்ஷா விரைவில் மேற்கு வங்கம் விஜயம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மீது தாக்குதல் முயற்சி நடந்து இருக்கும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் மேற்கு வங்கம் செல்ல உள்ளதாக தெரிகிறது.
டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அங்கு மூன்று கட்சி நிகழ்ச்சிகளில் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் மோதல் தீவிரம் அடைந்துளளது. அங்கு அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துளளது.
பாஜக தீவிரம்
மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதே வேளையில் அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக துடித்து வருகிறது.
தாக்குதல் முயற்சி
மேற்குவங்கத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா நேற்று சென்றார். அப்போது ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டு, கார் கண்ணாடி மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா காயமடைந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன.
குண்டர்கள் ஆட்சி
நல்ல வேளையாக ஜே.பி.நட்டாவுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ஆளும் கட்சி மீது ஜே.பி.நட்டா கடுமையாக தாக்கி பேசினார்.
தோல்வி
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது சட்டம் ஒழுங்கும் இல்லை, சகிப்பின்மையும் இ்ல்லை.மாநிலத்தில் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து, குண்டர்கள் ஆட்சி நடக்கிறது என்று அவர் மம்தா பானர்ஜி அரசை கடுமையாக சாட்டினார்.
மம்தா மீது குற்றசாட்டு
ஜே.பி.நட்டா மீதான தாக்குதல் முயற்சி பாஜகவை கடும் கோபம் அடைய செய்துளளது. அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த தாக்குதலுக்கு மம்தாவை குற்றம் சாட்டி உள்ளனர். மேற்கு வங்கத்தில் குண்டர்களின் ஆதிக்கம் பெருகி விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
திட்டமிட்டபடி பயணம்
இத்தனை கலவரங்களுக்கு மத்தியிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் மேற்கு வங்க மாநிலத்துக்கு செல்ல உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மேற்கு வங்கத்தில் மூன்று கட்சி நிகழ்ச்சிகளில் அமித்ஷா கலந்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டபட்டு இருந்தது.
எங்களுக்கு பயம் கிடையாது
தற்போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தாலும், அமித்ஷா பயந்து பின்வாங்காமல் திட்டமிட்டபடி அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இரு கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அடிக்கடி கொல்லப்பட்டு வந்தனர். தற்போது பாஜக தேசிய தலைவர் மீதே தாக்குதல் நடத்த முயன்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.