30 சதவிகித ஓட்டு போயிடுமே.. மேற்கு வங்கத்தில் குட்டிக்கரணம் அடிக்கும் பாஜக, திரிணாமூல்
மேற்குவங்கம்: ராஜ்போன்ஷி சமூகத்தின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, துணை ராணுவப் படைகளில் புதிய 'நாராயணி சேனா பட்டாலியன்' ஏற்படுத்தப்படுவதாக அமித் ஷா இன்று அறிவித்துள்ளார்
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் தீவிரமாக இயங்கி வருகிறது.
அதேசமயம், மம்தாவின் ஆட்சியை எப்படியாவது அகற்றிவிட்டு முதன் முதலாக அங்கு ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்றது பாஜகவும் படுவேகமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் மம்தா, 'அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தால் கலவரம் தான் நடக்கும். கலவரம் நடக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள்' என்று சமீபத்தில் தனது பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார்.
ராஜ்போன்ஷி சமூகம்
வடக்கு வங்கத்தில் வசிக்கும் ராஜ்போன்ஷி சமூகத்தின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, துணை ராணுவப் படைகளில் புதிய 'நாராயணி சேனா பட்டாலியன்' ஏற்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அறிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளில்
மேற்கு வங்கத்தில் 'Sonar Bangla' கனவை ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவதாக உறுதியளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
போலீஸ் பட்டாலியன்
அண்மையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கூச் பெஹாரில் 'நாராயணி', ஹில்ஸில் 'கோர்கா' மற்றும் பழங்குடி பகுதிகளை மையமாகக் கொண்ட 'ஜங்கல்மஹால்' என்ற பெயரில் மூன்று தனித்தனி போலீஸ் பட்டாலியன்களை அமைப்பதாக அறிவித்தார். வடக்கு வங்காளத்தில் ராஜ்போன்ஷி சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையாக 'நாராயணி சேனா பட்டாலியன்' இருந்து வருகிறது.
தீர்மானிக்கும் சக்தி
வடக்கு வங்கத்தில் எந்தவொரு கட்சி வெற்றிப்பெற வேண்டுமென்றாலும், 30 சதவிகிதம் வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் ராஜ்போன்ஷி சமூகத்தினர் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களே அங்கு முடிவை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உள்ளனர்.
பாஜக, திரிணாமூல் திட்டம்
மேற்கு வங்கத்தின் மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில், வடக்கு வங்கத்தில் மட்டும் 54 சீட்கள் உள்ளன. இதில், கிட்டத்தட்ட 50 இடங்களில் வெற்றிப் பெறுவது என்பது ராஜ்போன்ஷி சமூகத்தினர் கைகளில் தான் உள்ளது. இதனை பாஜவும், திரிணமூல் காங்கிரஸும் நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றன.
சட்டவிரோத ஊடுருவல்
இதுகுறித்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித்ஷா, "இன்று, நாராயணி சேனாவின் துணிச்சலுக்காக அறியப்பட்ட கூச் பெஹாரில் இருந்து உங்களுடன் உரையாற்றுவதில் பெருமைப்படுகிறேன். நாராயணி சேனா தைரியமாக முகலாயர்களுடன் சண்டையிட்டு அவர்களை விரட்டியடித்தது. இப்போது மீண்டும் நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவல்கள் இருக்கின்றன. இந்த நேரத்தில் துணை ராணுவப் படைகளில் நாராயணி சேனா பட்டாலியனை விரைவில் அர்ப்பணிப்போம்" என்று கூறியுள்ளார்.