எதியூரப்பா அரசுதான் ஊழலில் முதலிடம்... அமித்ஷா உளறலால் கர்நாடகா பாஜக 'ஷாக்'
எதியூரப்பாவை ஊழல்வாதி என அமித்ஷா குறிப்பிட்டது பெரும் சர்ச்சையாகிவிட்டது.
பெங்களூரு: மிக மோசமான ஊழல் அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எதியூரப்பா அரசுதான் முதலிடம் பிடிக்கும் என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அமித்ஷா வாய் தவறி குறிப்பிட்டாலும் தேர்தல் நடைபெறும் நிலையில் கர்நாடகா பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தென்னிந்தியாவில் கர்நாடகாவில்தான் பாஜக முதன் முதலில் 2008-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் சட்டவிரோத சுரங்க அனுமதி புகாரில் சிக்கி எதியூரப்பா முதல்வர் பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் பாஜகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி நடத்தினார் எதியூரப்பா. பின் மீண்டும் பாஜகவில் ஐக்கியமானார் எதியூரப்பா. தற்போது மே 12-ந் தேதி நடைபெறும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார் எதியூரப்பா.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகாவில் முகாமிட்டிருக்கிறார் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா. பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை அமித்ஷா சந்தித்தார்.
Who knew @AmitShah could also speak the truth- we all concur with you Amit ji @BSYBJP is the most corrupt! pic.twitter.com/GFbTF3Mg7H
— Divya Spandana/Ramya (@divyaspandana) March 27, 2018
அப்போது, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார் அமித்ஷா. மேலும், மிக மோசமான ஊழல் அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எதியூரப்பா அரசுக்குதான் முதலிடம் என அமித்ஷா கூற அருகே இருந்த பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து சித்தராமையா அரசு என திருத்தினர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ, அமித்ஷா உண்மையை உரக்கச் சொல்லிவிட்டார் என அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது.