ஜிஎஸ்டி வரிவிதிப்பாலேயே குஜராத்தில் 150 தொகுதிகளில் பாஜக வெல்லும்: அமித் ஷா தடாலடி
அகமதாபாத்: ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக பாஜக குஜராத் சட்டசபை தேர்தலில் எளிதில் வெற்றி பெறும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி டிவி சேனல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று அமித்ஷா கூறுகையில், "இன்னும் ஓராண்டுக்குள், ஜிஎஸ்டி ஒரு ஆசீர்வாதம் என்பதை வணிகர்கள் உணர்வார்கள். அது சுமை கிடையாது என்பது தெரியவரும்.
வெற்றி நிச்சயம்
பிரதமரே இந்த விவகாரங்களை நேரடியாக கண்காணித்து வருகிறார். ஜிஎஸ்டியின் பலன் விரைவில் எல்லோருக்கும் தெரியவரும். இதனால் குஜராத்தில், 150 தொகுதிகளிலாவது பாஜக வெல்லப்போவது உறுதி.
மின்சார வசதி
குஜராத்தில் தொடர்ந்து பாஜக ஆட்சி செய்ததன் விளைவாக குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. சவுராஸ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம் இப்போது இல்லை. குஜராத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் மின் வசதி உள்ளது.
இத்தாலியில் இல்லை
மோடி குஜராத் மீது அக்கறையோடுதான் உள்ளார். மோடி டெல்லியில்தான் உள்ளார். இத்தாலியில் கிடையாது. எனவே குஜராத் மீது அக்கறை காட்ட அவரால் முடியும். குஜராத் மாடல் பற்றி விமர்சனம் செய்யும் முன்பாக அமேதி மாடல் என்ன என்பதை காங்கிரஸ் உற்று நோக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு வேறு வகையில்
நாட்டிலுள்ள 125 கோடி மக்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்குவது என்பது முடியாத விஷயம். ஆனால் ஒவ்வொருவருக்கும் சுய வேலைவாய்ப்பை உருவாக்குவது சாத்தியம். சோஷியல் மீடியாவில் காங்கிரஸ் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்கிறார்கள். ஆனால் அது இந்தியாவில் இருந்தா அல்லது கஜகஸ்தானில் இருந்து அதிகரித்துள்ளதா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் போலி சோஷியல் மீடியா கணக்குகள் வெளிநாடுகளில் இருந்தும் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளார்.