நாடு முழுக்க வருகிறது தேசிய குடிமக்கள் பதிவு.. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. அமித் ஷா பேச்சு
கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறையை நாடு முழுக்க கொண்டுவந்து, சட்டவிரோத குடியேறிகள் அனைவரையும் நாட்டை விட்டே வெளியேற்றுவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறை பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாக மாறியது.
லட்சக்கணக்கான மக்கள் இந்தியக் குடியுரிமையை இழக்க கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளதால், அந்த மாநிலத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, நாடு முழுவதிலும் தேசியக் குடியுரிமை பதிவு, நடைமுறையைக் கொண்டு வந்து, சட்டவிரோத குடியேறிகள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர் குடியேறிகள், இந்திய குடியுரிமை சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுவார்கள். எனவே அவர்கள் தங்கள் குடியுரிமை பறிபோய்விடும் என அச்சப்பட தேவையில்லை (முஸ்லீம்களை மட்டும் அமித்ஷா குறிப்பிடவில்லை).
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு, மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்து வருகிறார். அவர் என்னதான் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவோம்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக ஒரு காலத்தில் மமதா பானர்ஜி குரல் கொடுத்தார். இதற்கு காரணம், அப்போது அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களித்தனர். ஆனால், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சட்டவிரோத குடியேறிகள் வாக்களிப்பதன் காரணமாக, இப்போது அவர்களுக்கு மமதா பானர்ஜி ஆதரவு அளிக்கிறார். ஆனால் கட்சியின் நலனுக்காக, நாட்டின் நலனை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
West Bengal: Union Home Minister Amit Shah inaugurates a #DurgaPuja pandal in Kolkata. pic.twitter.com/19DrvLhC3t
— ANI (@ANI) October 1, 2019
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார். நவராத்திரியையொட்டி, மேற்கு வங்க மாநிலம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. கொல்கத்தாவிலுள்ள, துர்கா தேவி விழா பந்தலுக்கு சென்ற அமித்ஷா அம்பிகையை தரிசனம் செய்தார்.