உள்நாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது.. காஷ்மீர் குறித்து அமித்ஷா கருத்து!
ஹைதராபாத்: உள்நாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளர்ச்சி பெறாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 5-ஆம் தேதி நீக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.மேலும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேலின் கனவு நிறைவேற்றியுள்ளதகாவும் மத்திய அரசு கூறி வருகிறது.
சிறப்பு அந்தஸ்து ரத்து
இந்த நிலையில் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் முழுமையாக இணைக்கவே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக அமித்ஷா கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில்
இதில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசு
630 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்ததை முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் இந்திய நாடாக ஒருங்கிணைத்தார். இது யாரும் நினைத்து பார்க்க முடியாத, கற்பனை செய்ய முடியாத நடவடிக்கையாகும். ஜம்மு காஷ்மீர் மட்டும் அப்போது விடுபட்டுவிட்டது. தற்போது பாஜக அரசு மூலம் அந்த கறை நீங்கியது.
இந்தியாவுடன் இணைப்பு
ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க நிசாம் 7 மிர் ஓஸ்மான் அலி கானுக்கு விருப்பமில்லை. இதையடுத்து படேல் இந்திய ராணுவத்தினரை ஹைதராபாத்தில் குவித்தார். பின்னர் இந்தியாவுடன் இணைத்தார்.
பயங்கரவாதம்
இந்திய நாடு பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல், சைபர் கிரைம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காணாமல் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.