வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள சட்டப்பிரிவு 371 ரத்து செய்யப்படுமா? அமித் ஷா விளக்கம்
இட்டாநகர்: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது போல் வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள சட்டப்பிரிவு 371ஐ ரத்து செய்ய மாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில் இருந்த அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370 ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. இதேபோல் அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, சிக்கிம் உள்பட வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை காக்கும் வகையில் சிறப்பு சட்டப்பிரவு 371 இயற்றப்பட்டு அமலில் உள்ளது.
ஆனால் காஷ்மீரைப் போல் வடகிழக்கு மாநிலங்களிலும் சட்டப்பிரிவு 371ஐ மத்திய அரசு நீக்கப்போவதாக தகவல்கள் பரவியது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அருணாச்சல பிரதேச மாநிலம் உருவான 34வது தினவிழா கொண்டாட்டம் இட்டா நகரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு வரை வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் பிறப்பகுதியுடன் பூகோல ரீதியாக (புவியியல்) மட்டுமே இணைந்து இருந்தது.
ஆனால் மோடி அரசு பதவியேற்ற பின்னர் நாட்டின் மற்ற பகுதியுடன் உணர்வு பூர்வமாக இணைந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் பிரிவு 370ஐ ரத்து செய்தது போல் வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள சிறப்பு சட்டப்பிரிவு 371ஐ ரத்து செய்யப்போவதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆனால் அதுபோன்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. இந்த பகுதியில் உள்ள தீவிரவாதிகள் பிரச்சனை, மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்க்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது
நாங்கள் அடுத்த முறை வாக்கு கேட்டு வரும் போது தீவிரவாதிகள் பிரச்சனை, மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை இல்லாத மாநிலங்களாக வடகிழக்கு மாநிலங்கள் திகழும்" இவ்வாறு கூறினார்.