உ.பி. தேர்தல் ஜூரம்... கும்பமேளாவில் தலித் சாதுக்களுடன் புனித நீராடிய அமித்ஷா
உஜ்ஜெய்னி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னியில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சமூக நல்லிணக்க நீராடலின் ஒருபகுதியாக தலித் சாதுக்களுடன் பாஜக தலைவர் அமித்ஷா புனித நீராடினார்.
உஜ்ஜெய்னியில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளாவில் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சாதுக்களும் பல லட்சம் பக்தர்களும் பங்கேற்று சிர்பா நதியில் புனித நீராடி வருகின்றனர்.
இந்த புனித நீராடலின் ஒருபகுதியாக சமூக நல்லிணக்க நீராடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தலித் சாதுக்களுடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா புனித நீராடினார். இதனைத் தொடர்ந்து சமூக நல்லிணக்க விருந்தும் நடத்தப்பட்டது. முன்னதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார் அமித்ஷா.
அதே நேரத்தில் அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதை முன்வைத்தே இப்படியான ஒரு புனித நீராடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலின் போது இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய பேச்சு பாஜகவுக்கு மரண அடியை கொடுத்தது. ஆகையால் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கு முன்னரே உஷாராக இப்போதே தலித்துகள், பழங்குடிகளை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.