சி.ஏ.ஏ.வை எதிர்க்கும் மமதாவை மக்கள் அரசியல் அகதியாக்குவார்கள்... டிஜிட்டல் பேரணியில் அமித்ஷா ஆவேசம்
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) எதிர்க்கும் மமதாவை மக்கள் அரசியல் அகதியாக்கப் போகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்திருக்கிறார்.
கொரோனாவின் பாதிப்பு தொடங்கியதில் இருந்து அமித்ஷா குறித்து செய்திகள் எதுவும் வெளியாகாமல் இருந்தன. இதனால் வதந்திகளும் பஞ்சமில்லாமல் பரவின. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மறுத்திருந்தார்.
இப்போது நாட்டில் கொரோனாவின் பாதிப்பு படுதீவிரமாகி இருக்கிறது. இந்த நிலையில் ஆளும் பாஜகவோ சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
கர்நாடகா ராஜ்யசபா தேர்தல்- எடியூரப்பாவுக்கு ஷாக் கொடுத்த பாஜக - அறிமுகம் இல்லாத 2 பேர் வேட்பாளர்கள்
பீகார் சட்டசபை தேர்தல்
பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா லாக்டவுன்கள் முடிந்த பின்னர் தேர்தலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பீகாரில் ஜேடியூவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. இந்த கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமித்ஷா பிரசாரம்
ஆனால் இதனைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பாஜக பிரசாரங்களை தொடங்கிவிட்டது. வீடியோ கான்ஃபரன்ஸ் நேரலை மூலமாக பீகாரின் அத்தனை பூத்துகளிலும் பாஜக தொண்டர்களிடையே அமித்ஷா, ஞாயிறன்று பேசினார். கொரோனா குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அமித்ஷா தொட்டு பேசினாலும் மோடியின் ஆட்சிக் கால சாதனைகளையும் காங்கிரஸையும் விமர்சித்துதான் அமித்ஷா அதிகம் பேசினார்.
மே.வங்கத்தில் அமித்ஷா
இதனைத் தொடர்ந்து இன்று மேற்கு வங்க பாஜகவினரிடையே அமித்ஷா பேசினார். இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வருகிறார் மமதா. இதற்கான விலையை மமதா நிச்சயமாக கொடுக்கப் போகிறார். இதே மேற்கு வங்க மக்களே மமதா பானர்ஜியை அரசியல் அகதியாக்கப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.
அரசியல் அகதியாகும் மமதா
குடியுரிமை சட்ட திருத்தம் என்பது மிகவும் முக்கியமானது. இதனை மேற்கு வங்க மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அகதிகள் என்ற காரணத்துக்காக பல பத்தாண்டுகளாக இந்த மண்ணில் நடந்த தவறுகளை இந்த குடியுரிமை சட்ட திருத்தமானது முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. மமதா பானர்ஜியைப் போல மிக மூர்க்கமான கோபம் கொண்ட ஒருவரை நான் பார்த்ததே இல்லை. ஒடுக்கப்பட்ட இந்துக்கள் இந்தியாவில் குடியுரிமை பெறுவதை பற்றி நினைத்து பார்க்கவில்லையா மமதா ஜி அவர்களே! அப்படி நினைத்திருந்தால் நீங்கள் ஏன் கோபப்பட வேண்டும்?
கொரோனா எக்ஸ்பிரஸ் -மமதா கிண்டல்
இடம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர 236 ரயில்களைத்தான் மேற்கு வங்கம் அனுமதித்திருக்கிறது சுமார் 1 லட்சம் பேர் சொந்த மாநிலம் திரும்பினர். இந்த ரயிலை கொரோனா எக்ஸ்பிரஸ் ரயில் என்று மமதா பான்ர்ஜி அழைத்தார். இந்த இடம்பெயர் தொழிலாளர்கள்தான்- இந்த கொரோனா எக்ஸ்பிரஸ்தான் உங்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போகிறது என்பதையும் மமதா பானர்ஜி புரிந்து கொள்ள வேண்டும்.
வரையறை வேண்டாமா?
மக்களுக்கான சுகாதார திட்டங்களை ஏன் மமதா பானர்ஜி ஏற்கவில்லை? நீங்கள் அரசியல் செய்வதற்கும் ஒரு வரையறை வேண்டாமா? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எல்லாம் மத்திய அரசின் சுகாதார திட்டங்களை ஏற்கும் போது மமதா பானர்ஜி மட்டும் மறுப்பது ஏன்? பாஜக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அந்த சுகாதாரத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்போம் என உறுதி அளிக்கிறேன்.
டிஜிட்டல் பிரசாரத்தை தடுக்க முடியுமா?
மேற்கு வங்கத்தில் அரசியல் பேரணிகளை நடத்த அனுமதி மறுக்கிறீர்கள்.. ஹெலிகாப்டர்களை தரை இறங்க அனுமதி மறுக்கிறீர்கள். சரி.. இப்போது டிஜிட்டல் மூலமாக நாங்கள் பிரசாரம் செய்கிறோமே? உங்களால் தடுக்க முடிந்ததா? தங்கமயமான மேற்கு வங்கத்தை பாஜகவால் உருவாக்க முடியும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைவிட இடதுசாரிகளே பரவாயில்லை என்றுதான் இப்போது மேற்கு வங்க மக்கள் கருதுதாக கேள்விபட்டேன். வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தே தீரும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.