ஓணம் திருநாளுக்கு வாமண ஜெயந்தி வாழ்த்து கூறுவதா? அமித் ஷாவுக்கு எதிராக வெடிக்கும் சர்ச்சை
திருவனந்தபுரம்: கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி போல வாமண ஜெயந்தி வாழ்த்து கூறியது இப்போது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர் அமித் ஷா கேரளாவின் முக்கியப் பண்டிகையான ஓணத் திருவிழாவுக்கு, வாமன ஜெயந்தி வாழ்த்துக் கூறியதுதான் இப்போது பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது.
மலையாளிகளின் தேசிய திருவிழாவான ஓணம் பண்டிகை உலகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் வாழும் மலையாள மக்கள் புத்தாடை உடுத்தி, அத்தப்பூ கோலமிட்டு பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
ஓணம் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஓணம் பண்டிகை குறித்த பாஜக தலைவர் அமித் ஷாவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமித் ஷாவின் ஓணம் வாழ்த்து
அமித் ஷா தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், புராண வாமன அவதாரம் தன் இடது காலை மகாபலியின் தலை மீது அமிழ்த்தி, அவரை பாதாளத்துக்குள் அனுப்புவது போன்ற படத்தைப் பகிர்ந்து, கேரள மக்களுக்கு வாமன ஜெயந்தி வாழ்த்துக் கூறியிருந்தார்.
வாமன அவதாரம்
आप सभी को "वामन जयंती" की हार्दिक शुभकामनाएं | pic.twitter.com/y4A5412mvM
— Amit Shah (@AmitShah) September 13, 2016
அதைத்தொடர்ந்து, 'மகாபலி மன்னனை அழித்த, மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமனரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விழா ஓணம். அறுவடைத் திருநாளில் மகாபலி மன்னனின் வருகையைக் கொண்டாடும் விழா அல்ல' என்ற பொருள்படும்படியான கட்டுரை மலையாள ஆர்.எஸ்.எஸ்.ஸில் வந்துள்ளது. இதற்கு மலையாளிகள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அமித் ஷாவின் பதிவைக் கடுமையாக மறுத்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ''ஓணம் பண்டிகை எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்துகிறது. ஷா, தன்னுடைய பதிவை நீக்க வேண்டும் அல்லது மன்னிப்புக் கோர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ''ஷாவின் பதிவு, ஓணம் பண்டிகை உயர்சாதிக்கு மட்டுமானது என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. மகாபலியின் வருகையைக் கொண்டாடும் ஓணத்தின் வரலாற்றை மாற்றியமைக்க விரும்பும் அமித் ஷாவை கேரள மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
சமூக விமர்சகர் சந்திரன், ''ஓணம் ஒரு காலத்தில் உயர் சாதியினர் கொண்டாடும் விழாவாக இருந்தது. பின்னாட்களில் அனைத்து வகுப்பு மக்களும் அதைக் கொண்டாடத் தொடங்கினர். இது கருப்பின மகாபலிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தது. இந்த மறுமலர்ச்சியைத்தான் சங்கப்பரிவாரங்கள் துவம்சம் செய்யப் பார்க்கின்றன'' என்றார். கேரளாவை சேர்ந்த பலரும் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Amit Shah's problems is not just that he misunderstands Onam and Kerala's ethos, but that he misunderstands India's ethos.
— Salil Tripathi (@saliltripathi) September 14, 2016
இச்சர்ச்சைகள் குறித்து விளக்கமளித்த கேரள மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன், ''கேரள மக்கள் வாமனரையும் வழிபட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள், கடவுள் வாமனரின் ஆலயமான திரிக்கக்கரா ஆலயத்தை வழிபடுகின்றனர். வாமன ஜெயந்தி என்பது ஓண வழிபாட்டின் கூடுதல் அம்சமே தவிர, அதற்கு எதிரானதல்ல'' என்று கூறியுள்ளார்.