தீட்டிய ஸ்கெட்ச் சக்ஸஸ்..அமித்ஷா இன்று மேற்குவங்கம் விஜயம்..திரிணாமுல் தலைவர்கள் பாஜகவில் ஐக்கியம்?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார்.
அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர்கள் பலர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உளளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் இந்த முறை ஆட்சி அமைக்க வேண்டும் என பாஜக துடிப்புடன் உள்ளது.
அங்கு ஏற்கனவே பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கடந்த வாரம் அங்கு சென்றபோது அவரது பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.
இந்த நிலையில் உள்துறை அமைச்சரும், பாஜக முத்த தலைவருமான அமித்ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார். கொல்கத்தாவுக்கு இன்று இரவு சென்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அமித்ஷா, நாளை காலை தேசிய புலனாய்வு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் கொல்கத்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்குச் சென்று மரியாதை செலுத்தும் அவர், மிட்னாப்பூரில் இரு கோவில்களில் தரிசனம் செய்கிறார். விவசாயி ஒருவரின் இல்லத்தில் அவர் மதிய உணவு சாப்பிட உள்ளார். ஞாயிற்றுக்கிழமை சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்துக்கு அமித் ஷா செல்கிறார். பாஜக சார்பில் 2 இடங்களில் நடைபெற உள்ள பேரணியிலும் அவர் பங்கேற்கிறார்.
2 நாளில் மூன்று எம்எல்ஏக்கள்....கட்சியில் இருந்து விலகல்... அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி!
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள் சுவேந்து அதிகாரி உள்பட 3 பேர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டுமானால் அங்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள நபர்களை பாஜகவுக்கு இழுக்க வேண்டும் அமித்ஷா கணக்கு போட்டு வருகிறார்.
அவர் காய் நகர்த்தும்படியே திரிணாமுல் காங்கிரசில் தற்போது குழப்பம் நிலவி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்காக மேற்கு வங்க தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.