"லஞ்ச்".. தரையில் உட்கார்ந்து.. விவசாயி வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா.. மே.வங்கத்தில் செம கலக்கல்
விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் அமித்ஷா
கொல்கத்தா: 2 நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தன் பயணத்தின் நடுவில் விவசாயி ஒருவர் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.
அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. இதையொட்டி பாஜக தலைவர்களும் மேற்கு வங்கத்தில் தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில்... பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட நிலையில்... உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் 2 நாள் பயணமாக மேற்கு வங்காளத்திற்கு இன்று சென்றடைந்தார்.
ஆட்டத்தை ஆரம்பித்த அமித்ஷா.. 2 நாள் பயணமாக இன்று கொல்கத்தா சென்றார்.. சூடுபிடிக்கும் மே.வங்க தேர்தல்
விவேகானந்தர்
கொல்கத்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு சென்ற அமித்ஷா அங்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இது விவேகானந்தர் ஜி பிறந்த இடம். நவீனத்துவத்திற்கும், ஆன்மீகத்திற்கும் சுவாமி விவேகானந்தர் முன் மாதிரி.. அவர் நமக்கு காட்டிய உன்னதமான வழியில் நடப்போம்'' என்றார்.
மரியாதை
இதையடுத்து, சுதந்திர போராட்ட வீரர் குடிராம் போஸின் இல்லத்திற்கு சென்று அமித்ஷா மரியாதை செலுத்தினார். பின்னர் போஸின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து பேசினார்... அப்போது அமித்ஷா சொல்லும்போது, "சிறந்த சுதந்திர போராட்ட வீரர் குடிராம் போஸின் வீட்டின் மண்ணில் என் நெற்றியைத் தொட முடிந்தது... இது எனது அதிர்ஷ்டம். இந்திய சுதந்திர இயக்கத்திற்காக தன்னை தியாகம் செய்ய அவர் மகிழ்ச்சியுடன் தூக்கு மேடைக்கு சென்றவர்" என்றார்.
சாப்பாடு
பிறகு, மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டில் மதிய உணவை சாப்பிட்டார் அமித்ஷா.. அவருடன் பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் ஆகியோரும் மதிய உணவு சேர்ந்து சாப்பிட்டனர். அனைவரும் தரையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். பாஸ்சிம் மெதினிபுர் மாவட்டத்தில் உள்ள பாலிஜுரி கிராமத்தில் உள்ள விவசாயி வீட்டுக்குத்தான் அமித் ஷா விசிட் அடித்தார்.
போராட்டம்
வேளாண் சட்ட விவகாரத்தில் தாங்கள் விவசாயிகளுடன் இருக்கிறோம் என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது அமித் ஷாவின் இந்த விசிட் மற்றும் லன்ச். மேற்கு வங்கத்துக்கு 2வது முறையாக வந்துள்ளார் அமித் ஷா. கடந்த நவம்பரிலும் அவர் வந்து போயிருந்தார். இன்று அவர் மிதினாப்பூரில் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அதற்கு முன்பாக இந்த விவசாயி வீட்டு விசிட்டை மேற்கொண்டார்.
பேட்டி
இந்த விசிட் குறித்து முன்னதாக விவசாயி சனாதன் சிங் சொல்லும்போது, "அமித்ஷா உள்ளிட்டோர் வரப் போகிறார்கள் என்று எனக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது. இதனால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் ஒரு சாதாரண விவசாயி. மிகவும் ஏழையும் கூட. என்னால் நல்லா சாப்பாடு கூட போட முடியாத நிலையில்தான் இருக்கிறேன். நாட்டை அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வைத்துக் கொள்ளுமாறு நான் அமித்ஷாவிடம் கேட்டுக் கொள்வேன். அமித்ஷாவை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் 50 வருடமாக பாஜகவில் இருந்து வருகிறேன் என்றார்.
மாற்றம்
இதைத்தொடர்ந்து, அமித் ஷா கொல்கத்தா செல்லவுள்ளார். கொல்கத்தாவின் ராஜர்ஹாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.அமித்ஷாவின் இந்த 2 நாள் சுற்றுப்பயணமானது, மேற்கு வங்க அரசியலில் அதிரடி மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.