கட்சியை பலப்படுத்த முடிவு - அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் அமித்ஷா : தமிழிசை
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அமித்ஷா அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அமித்ஷா அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளார் என்று தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் டெல்லியில் இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்று சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், வாஜ்பாய் உடல்நிலை தற்சமயம் சீராக இருக்கிறது. அவருக்கான மருத்துவசிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டி உள்ளது. அதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் தமிழகம் வர இருக்கிறார்.
தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கும் மனப்பான்மை வந்துவிட்டது. அதனால்தான் தமிழகத்திற்கு நலன்களை வழங்கக் கூடிய சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை சிலர் எதிர்க்கிறார்கள்.
அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் பல விதங்களில் முன்னேற்றம் அடையும். ஆனால், சிலர் அது குறித்து தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.