எங்க பென்ஷனை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்: அகிலேஷுக்கு அமிதாப் பச்சன் கோரிக்கை
மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது குடும்பத்தாருக்கு அளிப்பதாக கூறிய ஓய்வூதிய பணத்தை ஏழை, எளியவர்களுக்கு உதவும் நல்ல திட்டத்திற்கு அளிக்குமாறு உத்தர பிரதேச அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநில அரசு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா, மகன் அபிஷேக் ஆகியோருக்கு தங்கள் அரசு ஆட்சியில் இருக்கும் போது எல்லாம் அவர்களின் வாழ்நாள் வரை மாதாமாதம் அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று அறிவித்தது.
உத்தர பிரதேச அரசின் யஷ் பாரதி விருதை பெறுபவர்களுக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும். அமிதாப், ஜெயா, அபிஷேக் ஆகியோர் அந்த விருதை பெற்றுள்ளதால் அவர்களுக்கு ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
யஷ் பாரதி விருது பெற்றுள்ள என் குடும்பத்தாருக்கு மாதாமாதம் ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் உத்தர பிரதேச அரசை மதிக்கிறேன். என் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத் தொகை அனைத்தையும் ஏழை, எளியவர்களுக்கு உதவும் நல்ல திட்டத்திற்கு அளிக்குமாறு உத்தர பிரதேச மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இது தொடர்பாக நான் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு கடிதம் எழுத உள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.