நெருப்புடன் விளையாடும் கேரள அரசு.. அமித்ஷா சொன்ன "அந்த" 5 விஷயங்கள் என்ன?
கண்ணணூர்: ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தை ஒடுக்குவதன் மூலம் ஐயப்பன் சன்னிதானத்தை அழிக்க கேரள அரசு முயற்சிக்கிறது என தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசு முற்படுவதால் மாநிலத்தில் பதற்றமான சூழல் அதிகரிக்கிறது. இதையடுத்து கோயில் நடை திறக்கப்பட்டவுடன் 5 பெண்கள் சன்னிதானத்தை அடைய முயற்சித்தனர். எனினும் அவர்களை போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணணூரில் பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இன்று கேரளத்தில் மதம் மீது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கும் மாநில அரசின் கொடூரர்களுக்கும் இடையே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
5 விஷயங்கள்
இதில் பாஜக, ஆர்எஸ்எஸ், மற்ற அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுள் 2000 பேர் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கேரள அரசுக்கு 5 விஷயங்களை தெரிவித்துள்ளார்.
நிறுத்த வேண்டும்
அவை பக்தர்களுடன் பாஜக உறுதியாக உள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க கேரள அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் ஆகும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்துவது என்ற பெயரில் நடத்தப்படும் கொடூரங்களை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கட்டுப்பாடுகள் இல்லை
சபரிமலை கோயிலையும் இந்துக்களின் பாரம்பரியங்களையும் அழிப்பதற்கான முயற்சியை இடதுசாரிகள் அரசு எடுத்து வருகிறது. இந்துக்களின் நம்பிக்கையை சூதாட பாஜக ஒரு போதும் அனுமதிக்காது. மற்ற ஐயப்பன் கோயில்களில் பெண்களை அனுமதிப்பதற்கு எந்த கட்டுப்பாட்டுகளும் இல்லை.
அமல்படுத்த வேண்டும்
சபரிமலை கோயிலின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்து கோயில்களுக்கு எதிராக மாநில அரசு சதி செய்கிறது. இதனால் கேரளத்தில் அவசர நிலை ஏற்பட்டுள்ளது போன்ற சூழல் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் மாநில அரசு எந்த வித நீதிமன்ற உத்தரவுகளையும் அமல்படுத்தியதே இல்லை. இந்த சபரிமலை தீர்ப்பானது பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமல்படுத்த வேண்டும் என்றார்.