காங்கிரஸுக்கு 30, கம்யூனிஸ்ட்டுக்கு 27, தீதிக்கு 10.. பாஜகவுக்கும் 5 ஆண்டுகள் தாங்க.. அமித்ஷா
கொல்கத்தா: காங்கிரஸ் கட்சிக்கு 30 ஆண்டுகளும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு 27 ஆண்டுகளும் மம்தா தீதிக்கு 10 ஆண்டுகளும் ஆட்சி செய்ய அனுமதித்தீர்கள், எங்களுக்கு ஒரு 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய கொடுத்தால் மேற்கு வங்கம் புதியதொரு மாற்றத்தை பெறும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவருடைய மருமகன் அபிஷேக் குறித்த கவலையே பெருங்கவலையாகிவிட்டது.
அவரை அடுத்த முதல்வராக்குவதே தீதியின் விருப்பமாகும். மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை மேற்கு வங்க மாநில மக்களுக்கு கிடைப்பதற்கு அந்த மாநில அரசு அனுமதிக்க மறுப்பது ஏன்?
பாருங்க.. அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் ஜெயிக்கும்- திருச்சியில் மோடி சகோதரர் பேட்டி
மேற்கு வங்கம்
மம்தா ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் மேற்கு வங்கத்தில் உள்ள விவசாயிகள் மத்திய அரசு வழங்கி வரும் ஆண்டுக்கு ரூ 6000 பெறுவர். 200-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். ஊழலை ஒழிப்பதாக மம்தா உறுதியளித்தார். ஆனால் அவர் குற்றவாளிகளை பாதுகாக்கிறார்.
திரிணமூல் காங்கிரஸ்
மத்திய அரசு கொடுத்த ஆம்பன் புயல் நிவாரண நிதி, பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய வில்லை. அவை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களின் பாக்கெட்டுகளில் உள்ளது. மேற்கு வங்கத்திற்கு பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வந்த போது அவரது காரை தாக்கியது ஏன்? இதை பார்த்து நாங்கள் அச்சமடைந்துவிடுவோம் என நினைத்தீர்களா?
அச்சம்
இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் நாங்கள் உங்களை பார்த்து அச்சமடையவே இல்லை. மற்ற கட்சியிலிருந்து நிர்வாகிகளை பாஜக சேர்த்து கொள்வதாக மம்தா குற்றம்சாட்டுகிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவர் செய்ததை நான் அவருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
நல்லதொரு மாற்றம்
மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல மாற்று கட்சியினர் பாஜகவில் இணைகிறார்கள். அதை பார்த்து மம்தா ஏன் கவலைப்பட வேண்டும்? மேற்கு வங்கத்தில் இன்னும் எந்த வளர்ச்சித் திட்டங்களஉம் நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 30 ஆண்டுகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 27 ஆண்டுகளும் மம்தா தீதிக்கு 10 ஆண்டுகளும் ஆட்சி செய்ய அனுமதித்தீர்கள். மக்களே எங்களை 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய அனுமதியுங்கள். நல்லதொரு மாற்றத்தை இந்த மாநிலம் காணும் என்றார் அமித்ஷா.