குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிபோகாது.. அமித்ஷா உறுதி
கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிபோகாது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் ஒரு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். அங்கு கொல்கத்தாவில் ஷாகித் மினார் மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கிலும் இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி அரசை வெளியேற்றும் வகையிலும் இனியும் தவறான செயல்கள் வேண்டாம் என்ற பெயரில் பாஜக சார்பில் புதிய இயக்கம் நடத்தப்படுகிறது.
மேற்கு வங்கம்
இந்த இயக்கத்தை தொடங்கி வைத்து அமித்ஷா பேசுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காள மக்களின் ஆசியால் பாஜகவுக்கு 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இடம் கிடைத்துள்ளன. மோடி அரசு வெற்றிகரமாக குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியதன் காரணமே மேற்கு வங்க மாநிலம்தான்.
குடியுரிமை சட்டம்
என்னை பொருத்தவரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிபோகாது என இஸ்லாமியர்கள் உறுதியளிக்கிறேன்.
கொள்கை
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை கொடுத்து மக்களிடம் பீதியை ஏற்படுத்தி வருகின்றன. மத ரீதியில் துன்புறுத்தப்பட்டு மற்ற நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு 70 ஆண்டுகளாகியும் காங்கிரஸால் குடியுரிமை வழங்கப்படவில்லை. அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். மாநிலத்தில் மம்தா அரசு திருப்திப்படுத்தும் கொள்கை, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
பட்டியல்
2021-ஆம் ஆண்டு பாஜகவை மக்கள் ஆதரிக்க வேண்டும். பாகிஸ்தானில் இந்தியா மேற்கொண்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் பாலகோட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு முன்புவரை, பயங்கரவாதிகளின் இருப்பிடத்துக்கு சென்று தாக்குதல் நடத்தும் திறன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு மட்டுமே இருப்பதாக உலக நாடுகள் கருதி வந்தன. ஆனால் அந்த வரிசையில் இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்து இருக்கிறது என்றார்.