வீட்டில் இருந்தே வேலை பாருங்கள்.. இந்தியப் பணியாளர்களுக்கு ஆம்னஸ்டி உத்தரவு
டெல்லி: ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் பிரிவான ஏபிவிபி, ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பிற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இன்று முதல் வீட்டிலிருந்தே பணிகளை செய்யுமாறு ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் தனது இந்தியப் பணியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 13ம் தேதி பெங்களூருவில் காஷ்மீர் பிரச்சனை தொடர்பான கருத்தரங்கம் ஒன்று ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாகவும், இந்திய ராணுவத்திற்கு எதிராகவும் பேசப்பட்டதாகக் கூறி ஏபிவிபியினர் பெங்களூருவில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அலுவலகங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், இந்தப் பிரச்சனையில் சுமூகத் தீர்வு ஏற்படும் வரை பணியார்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்குமாறும் அலுவலகங்களுக்கு வரவேண்டாம் என்றும் ஆம்னஸ்டி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.