அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் மீது தேசத் துரோக வழக்கு
பெங்களூரு: இந்திய இறையாண்மைக்கு எதிராக கோஷமிட்டதற்காக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு மீது பெங்களூரு போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உலகளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம் அம்னெஸ்டி இன்டர்நேஷனல். இந்த நிறுவனம் மனித உரிமைகளை பற்றி உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில், கடந்த 13 ம் தேதி காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய தேசத்திற்கு எதிராகவும் காஷ்மீரில் உள்ள ராணுவத்தினருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில் கூட்டத்தை நடத்திய நிர்வாகிகள் மீது தேசத் துரோக சட்டப் பிரிவு 124 ஏ, 142, 143, 152 ஏ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் பெங்களூரு ஜெ.சி. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் " நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்த பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்