ஆம்பன் சூப்பர் புயல்- ஒடிஷாவின் சபாஷ் நடவடிக்கை- 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
புவனேஸ்வர்: ஆம்பன் சூப்பர் புயல் நாளை மறுநாள் கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிஷாவில் 12 கடலோர மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் மக்கள் இன்று முதல் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
Recommended Video
வங்க கடலில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சூப்பர் புயல் உருவெடுத்துள்ளது. ஆம்பன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் புயல் வரும் 20-ந் தேதி கரையை கடக்க உள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றுக்கு இடையே இந்த சூப்பர் புயல் கரையை கடக்க உள்ளது. இப்புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 200கி.மீ அதிகமான வேகத்தில் புயல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆம்பன்: 21 ஆண்டுகளுக்குப் பின்.. சூப்பர் புயலை தில்லாக எதிர்கொள்ள தயாராகும் ஒடிஷா, மே. வங்கம்
மாநிலங்களில் முன்னெச்சரிக்கை
ஆம்பன் புயலை எதிர்கொள்ளும் வகையில் ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒடிஷாவில் கடலோர மாவட்ட மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது.
12 லட்சம் பேர் வெளியேற்றம்
ஒடிஷாவின் 12 கடலோர மவட்டங்களில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இன்று தொடங்கியுள்ள இந்த பணி நாளை பிற்பகல் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பானி புயலின் போதும் இதேபோல் பல லட்சக்கணக்கான மக்களை முன்னரே ஒடிஷா அரசு பாதுகாப்பாக வெளியேற்றியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
மக்களுக்கான முகாம்கள்
தற்போது பாதுகாப்பாக வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வசதிகள் கொண்ட 600 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 7,092 நிரந்தர கட்டிடங்களும் இந்த மக்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்து அழைத்து வரப்படும் மக்களுக்கான குடிநீர், உணவு, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
தயார் நிலை
ஒடிஷா மாநில தலைமை செயலாளர் அசித் திரிபாதி கூறுகையில், ஒடிஷாவில் ஆம்பன் புயல் கரையை கடந்தாலும் கூட அதை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம். கடந்த கால புயல் தாக்குதல்களில் இருந்து நாங்கள் பாடம் கற்றுள்ளோம். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறோம். இதற்காக சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்றார். பாதிப்புக்குள்ளாகும் கடலோர மாவட்டங்களில் ஒட்டுமொத்த ஒடிஷா அரசு நிர்வாகமும் களமிறக்கப்பட்டுள்ளது.