தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை
ஸ்ரீநகர்: இந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று கருதி மூன்று ராஜோரி தொழிலாளர்களை ராணுவத்தின் தவறுதலாகச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மேஜர் பதவியில் உள்ள ஒரு ராணுவ அதிகாரி குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 18ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஷோபியன் மாவட்டம் அருகேயுள்ள அம்ஷிபோரா என்ற கிராமத்தில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக முதலில் செய்தி வெளியானது.
16 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவரும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தார். இதன் காரணமாக ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் உண்மையாகவே பயங்கரவாதிகள்தானா என்ற சந்தேகமும் எழுந்தது.
விசாரணை ஆணையம்
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை நீதிமன்றம் ஒன்று ராணுவம் சார்பில் அமைக்கப்பட்டது. அப்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதும் அவர்கள் அப்பகுதியிலுள்ள தொழிலாளர்கள் என்பதும் தெரிய வந்ததது. மேலும், ஆயுதப்படைகளின் சிறப்புச் சக்தி சட்டம் எனப்படும் AFSPA 1950இன் கீழ் வீரர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அவர்கள் மீறியுள்ளதும் தெரிய வந்தது. இது மட்டுமின்றி, "உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ராணுவத் தளபதியின் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை" (COAS)க்கு மாறாகவும் வீரர்கள் செயல்பட்டது விசாரணையில் உறுதியானது.
விசாரணை நிறைவு
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது, மேலும் ஆதாரங்களின் சுருக்கமும் அது தொடர்பான பரிந்துரைகளும் லெப்டினென்ட் ஜெனரல் ஒய் கே ஜோஷிக்கு அனுப்பப்பட்டுள்ளன. விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய மேஜரை பல்வேறு பிரிவுகளின் கீழ் விசாரிக்க வேண்டும் என்று கண்டறியப்பட்டது. அடுத்தகட்டமாக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலைப் பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.
நடந்தது என்ன?
இந்தச் சர்ச்சைக்குரிய சம்பவம் இந்தாண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி அதிகாலை அம்ஷிபோரா என்ற நடைபெற்றது. ராணுவ மேஜர் தலைமையிலான ராஷ்டிரிய ரைஃபிள்ஸின் 62ஆம் பிரிவு அங்கு வனப்பகுதியிலிருந்த மூவரை சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூலை 19ஆம் தேதி செய்தியாளர்களிடம் 12ஆம் பிரிவு ராணுவ தளபதி, "ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம்ஷிபோரா கிராமத்தில் நடைபெற்ற மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்றார்.
பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு
மேலும், முதலில் பயங்கரவாதிகளாகக் கூறப்பட்டவர்களே முதலில் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ராணுவம் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திலேயே பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் அவர்களின் உடல்களை மீட்டெடுக்கும்போது மறைவிடத்தில் ஆயுதங்களும் ஐ.இ.டி பொருட்களும் கண்டறியப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்தது.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
கடந்த ஜூலை மாதம் வேலை தேடுவதற்காகக் காஷ்மீருக்குச் சென்ற இம்தியாஸ் அகமது, அப்ரார் அகமது மற்றும் மொஹமட் இப்ரார் ஆகிய மூன்று பேரை காணவில்லை என்று ஆகஸ்ட் மாதம் ராஜோரி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புகாரளித்தார். அப்போது முதல் இந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக வெளியான புகைப்படத்தில் உள்ளவர்கள் காணாமல்போன தங்கள் குடும்பத்தினர் என்றும் கூறினர். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
டிஎன்ஏ சோதனை
அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டது. பயங்கரவாதிகள் என்று கூறப்பட்டிருந்தவர்களின் உடல்கள் பாரிமுல்லா பகுதியில் புதைக்கப்பட்டிருந்தன. அவர்களின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்கள் ராஜோரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவவில்லை என்பதும் உறுதியானது.