ரூ. 450 கோடி ஊழலா.. எம்.டி ரத்னம் திடீர் ராஜினாமா... குற்றச்சாட்டை மறுக்கிறது அமுல்!
குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமுல் டெய்ரி நிறுவன மேலாண் இயக்குனர் ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Recommended Video
ஆனந்த் : அமுல் டெய்ரி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிய ரத்னத்தின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தம்சிங் பார்மர் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அமுல் என்ற பெயரில் புகழ்பெற்ற பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மேலாண் இயக்குனராக பணிபுரிந்து வருபவர் ரத்னம். கைரா பால் நிறுவனத்தில் துணை நிர்வாகியாக கடந்த 1995-ம் ஆண்டு பொறுப்பேற்றார். தொடர்ந்து 2014-ம் ஆண்டில் நிர்வாக இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டார்.
இந்நிலையில் 55 வயது ரத்னம் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், தமிழ்நாடு மற்றும் அமெரிக்காவில் இருக்கும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக தற்போது ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமுல் நிறுவனத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக உழைத்துவிட்டேன், எஞ்சிய 10 - 15 ஆண்டுகளை எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் செலவிட இருப்பதாக ரத்னம் கூறியுள்ளார். இந்நிலையில் இவர் மீது ரூ.450 கோடி அளவிற்கு ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததாக வதந்திகள் பரவின. இருப்பினும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ரத்னம் பதவியை ராஜினாமா செய்ததாக அமுல் தெரிவித்துள்ளது.
இவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பால் கூட்டுறவுத் தலைவர் ராம்சிங் பார்மர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கைரா பால் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக மூத்த பொது மேலாளர் ஜெனன் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார். ரத்னம் பதவி விலகியது குறித்து பார்மர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சத்தியத்தை விடவும் வதந்திகளால் வஞ்சிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.