அநாதை இல்ல அரசு சொத்து.. குப்பை தொட்டியில் கிடந்த குழந்தைக்கு குமாரசாமி என பெயரிட்ட கர்நாடக போலீஸ்
பெங்களூரின் செலிப்ரிட்டி லே அவுட் பகுதியில் நேற்று குப்பை தொட்டி ஒன்றில் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்: பெங்களூரின் செலிப்ரிட்டி லே அவுட் பகுதியில் நேற்று குப்பை தொட்டி ஒன்றில் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு போலீசார், அம்மாநில முதல்வர் குமாரசாமியின் பெயரை வைத்துள்ளனர்.
இது யாருடைய குழந்தை என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த குழந்தை மிகவும் மோசமான உடல்நிலையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்லப்பட்டவுடன் நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அந்த குழந்தை இனி அரசாங்க குழந்தை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
குப்பை தொட்டியில் கிடந்தது
பெங்களூரின் செலிப்ரிட்டி லே அவுட் பகுதியில் நிறைய கட்டிட வேலைகள் நடக்கிறது. இதில் நேற்று காலை பெங்களூர் நகர துப்புரவு பணியாளர்கள் குப்பை அள்ளும் போது, குப்பை தொட்டி ஒன்றில் ஆண் குழந்தை கிடப்பதை பார்த்துள்ளனர். மிகவும் மோசமான உடல்நிலையில், உடல் முழுக்க ரத்தத்துடன் அந்த குழந்தை இருந்துள்ளது.
போலீசுக்கு தகவல்
இதையடுத்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த குழந்தையை போலீஸ் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். மருத்துவமனையில் சில சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தொப்புள் கொடி கூட சரியாக அறுக்கப்படாமல், குப்பை தொட்டியில் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பால் கொடுத்த தாய் மனம்
இந்த நிலையில் அந்த குழந்தையை, இன்ஸ்பெக்ட்டர் நாகேஷ் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்துள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கான்ஸ்டெபிள் அர்ச்சனா, அந்த குழந்தை பசியில் இருப்பதை பார்த்துவிட்டு, போலீஸ் ஸ்டேஷனிலேயே பால் கொடுத்துள்ளார். அர்ச்சனாவுக்கு மூன்று மாதத்திற்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
குமாரசாமி குழந்தை
அந்த குழந்தையை அங்கேயே பாதுக்காப்பாக வைத்துள்ளனர். முத்தாய்ப்பாக அந்த குழந்தைக்கு குமாரசாமி என்று அம்மாநில முதல்வரின் பெயரை வைத்துள்ளனர். இனிமேல் இது அரசு குழந்தை, அரசே குழந்தை கவனித்துக் கொள்ளும், என்று அந்த போலீஸ் அதிகாரி பேட்டியளித்துள்ளார் .