மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தை குறையுங்கள்... உச்சநீதிமன்றத்தில் வினோதமான மனு
மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தை குறையுங்கள் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறையுங்கள் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வினோதமான மனுவை தாக்கல் செய்துள்ளார்.
வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில், தென்மேற்கு பருவமழை இந்தியா முழுவதும் பெய்து வரும் போதிலும் தமிழகத்துக்கு அந்த மழையால் எந்த பிரயோஜனமும் இல்லை.
இதற்கு காரணமே மேற்கு தொடர்ச்சி மலைகள்தான். தென்மேற்கு பருவமழைக்கான மேகங்கள், தமிழகத்துக்குள் நுழைய விடாமல் மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
இதனால் மற்ற மாநிலங்களைப் போல் தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கு பயனளிப்பதில்லை. மேகங்களும் மேற்கு தொடர்ச்சி மலையால் தடுக்கப்பட்டுவிடுவதால் தென்மேற்கு பருவமழை கேரளா மாநிலத்துக்கு மட்டும் அதிக மழைபொழிவை கொடுக்கிறது.
அதுமட்டுமல்லாது இந்த மழையால் 3000 டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைத்தால் தென்மேற்கு பருவமழை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பயனளிக்கும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.